Last Updated : 25 Apr, 2021 08:04 AM

 

Published : 25 Apr 2021 08:04 AM
Last Updated : 25 Apr 2021 08:04 AM

கோவேக்ஸின் தடுப்பூசி விலை விவரத்தை வெளியிட்டது பாரத் பயோடெக் நிறுவனம்: மத்திய அரசுக்கு ரூ.150க்கு விற்பனை

பிரதிநிதித்துவப்படம் : படம் உதவி ட்விட்டர்

புதுடெல்லி

சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசியைவிட பாரத்பயோ டெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்ஸின் விலை அதிகமாக இருக்கிறது. மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.600க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200க்கும் விற்பனை செய்யப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் மத்தியஅரசுக்கு கோவேக்ஸின் மருந்து ஒரு டோஸ் ரூ.150விலையில் வழங்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எம் இலா தெரிவித்துள்ளார்.

மே 1-ம் முதல்

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுவரை கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மட்டுமே வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த நிலையில், இனிமேல் வெளிச்சந்தையில் மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்தது.

தனியார் மருத்துவமனைகள், மாநிலஅரசுகள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்யலாம் என்று தெரிவித்தது. 50 சதவீதம் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், வெளிச்சந்தையிலும், 50 சதவீதத்தை மத்திய அரசுக்கும் மருந்து நிறுவனங்கள் விற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. விலை அளவுக்கு கட்டுப்பாடு ஏதும் மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை.

கோவிஷீல்ட் விலை

இதையடுத்து கோவிஷீல்ட் தயாரிக்கும் சீரம் நிறுவனம் தனது விலை விவரத்தை வெளியிட்டது.அதில் "வெளிச்சந்தையில் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 (2டோஸ்) ஆகவும், மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு விலை நிர்ணயித்து" அறிவித்தது.

வெளிநாடுகளோடு ஒப்பிடும்போது நம்நாட்டில் தடுப்பூசி விலை மிகவும் குறைவு. அமெரிக்காவில் தடுப்பூசி தனிநபர் ஒருவருக்கு ரூ.1,500 ஆகவும, ரஷ்யாவில் ரூ.750 ஆகவும், சீனாவில், ரூ.750 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது கோவிஷீல்ட் விலை குறைவு’ என்று சீரம் நிறுவனம் தெரிவித்தது.

கோவாக்ஸின் விலை

இந்நிலையில் ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவேக்ஸின் மருந்துக்கான விலையை நேற்று இரவு வெளியிட்டது. இதன்படி, மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் விலை ரூ.600 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 ஆகவும் விலை நிர்ணயித்துள்ளது.

கோவிஷீல்ட் மருந்தின் அதிகபட்சவிலை (2டோஸ்சேர்த்து) ரூ.600 ஆக இருக்கும் நிலையில், கோவேக்ஸின் விலை ரூ.1,200ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எம் இலா வெளியிட்ட அறிவிப்பில், “ மத்தியஅரசுக்கு நாங்கள் அளிக்கும் தடுப்பூசி சப்ளை தவிர்த்து கூடுதலாக 50 சதவீதத்தை மாநில அசுகளுக்கு வழங்க விரும்புகிறோம்.

புத்தாக்கத்தை நோக்கிச் செல்வதற்கு இதுபோன்ற விலை அத்தியாவசியமானது. வெளிநாடுகளுக்கு 15 முதல் 20 டாலர்களாக விலை நிர்ணயித்துள்ளோம். இந்தியாவில் மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.600 ஆகவும், தனியாருக்கு ரூ.1200 ஆகவும் நிர்ணயித்துள்ளோம்”எனத் தெரிவி்க்கப்பட்டது.

அதிகம் கோவிஷீல்ட்

இந்தியாவில் இதுவரை 12.76 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதில் 90 சதவீதம் பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசிதான் செலுத்தப்பட்டுள்ளது என மத்தியஅரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
12 கோடியே76 லட்சத்து 5 ஆயிரத்து 870 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 11 கோடியே 60 லட்சத்து 65 ஆயிரத்து 107 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரு கோடியே 15 லட்சத்து 40 ஆயிரத்து 763 பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே கரோனா நோயாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன், அது தொடர்பான கருவிகள், வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதி ஆகியவற்றுக்கு சுங்க வரியை நேற்று மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x