Published : 25 Apr 2021 04:30 AM
Last Updated : 25 Apr 2021 04:30 AM

இந்தூரில் நாட்டின் 2-வது மிகப்பெரிய கரோனா மையம்

நாட்டின் 2-வது மிகப்பெரிய கரோனா சிகிச்சை மையம் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் அமைக்கப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ‘ராதா ஸ்வாமி சத் சங்’ என்ற ஆன்மிக அமைப்பு இந்தியா உட்பட 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில்இந்தியாவில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘ராதா ஸ்வாமி சத் சங்’ சார்பில் கடந்த ஆண்டு டெல்லியில் 10,000 படுக்கை வசதிகளுடன் கூடிய உலகின் மிகப்பெரிய கரோனா மையம் திறக்கப்பட்டது. இதே அமைப்பு சார்பில் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் 6,200 படுக்கை வசதிகளுடன்கூடிய நாட்டின் 2-வது மிகப்பெரிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது.

முதல்கட்டமாக 600 படுக்கை களுடன் சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் படுக்கை வசதிகள் படிப்படியாக அதிகரிக்கப்பட உள்ளன. இங்கு அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் உள்ளன. மேலும் நோயாளிகளின் பொழுது போக்குக்காக பிரம்மாண்ட எல்இடி திரைகளும் அமைக்கப்பட் டிருக்கிறன. இவற்றின் மூலம் ராமாயண காட்சிகள், ஐபிஎல் தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அனைத்து நோயாளிகளுக்கும் ஒருமுறை பயன்படுத்தும் படுக் கைகள் வழங்கப்படுகிறது. ஒரு நோயாளி குணமடைந்து வீடு திரும்பியவுடன் அவர் பயன்படுத்திய படுக்கை அகற்றப்பட்டு புதிய படுக்கை பொருத்தப்படுகிறது. அப்போலோ, மெடிந்தா,
பாம்பே உள்ளிட்ட 4 மருத்துவமனைகளின் உதவியுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 36 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு தன்னார்வ உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராதா ஸ்வாமி சத் சங் பின்னணி..

இந்தியாவின் முதல் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலான சிவதயாள் சிங், பத்தொன்பதாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் மதங்களின் பெயரால் நிலவிய பல மூடப்பழக்கங்களை எதிர்த்து ஒரு பிரச்சாரம் தொடங்கினார். ஆக்ராவைச் சேர்ந்த இவரது இந்த இயக்கம், ‘ராதா ஸ்வாமி சத் சங்’ எனும் பெயரில் புதிய சமய மார்க்கமாக வளர்ந்தது. 1878-ம் ஆண்டு சிவதயாள் சிங் இறந்த பின் அவரது அஸ்தியை வைத்து ஆக்ராவில் ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. 1904-ல் அடிக்கல் நாட்டப்பட்ட பளிங்குக்கல் மண்டபம் நூறு வருடங்களைக் கடந்து இன்னும் நிற்கிறது. தாஜ் மகாலுக்கு இணையான இதைச் சுற்றி அந்த மார்க்கத்திற்கு சொந்தமான குடியிருப்பில் சிவதயாள் சிங்கின் வழியைப் பின்பற்றும் சுமார் 2000 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த சமய மார்க்கத்திற்கு சொந்தமாக பல லட்சம் ஏக்கர் நிலங்கள், உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மத்தியபிரதேசம், டெல்லி, ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ளன. எதிரில் வருபவர்களை ‘ராதா ஸ்வாமி’ எனக் கைகூப்பி வணங்கும் பழக்கம் இவர்களுக்கு உண்டு. ஆனால், இந்த சமய மார்க்கத்திற்கும், இந்துக்களின் கடவுளான ராதா-கிருஷ்ணனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x