Published : 25 Apr 2021 04:25 AM
Last Updated : 25 Apr 2021 04:25 AM

சிங்கப்பூரில் இருந்து 4 டேங்கர் ஆக்சிஜன்: விமானப்படை விமானம் மூலம் இந்தியா வந்தது 

சிங்கப்பூரில் இருந்து 4 டேங்க் ஆக்சிஜனுடன் இந்திய விமானப் படை விமானம் நேற்று இந்தியா வந்து சேர்ந்தது.

கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாட்டில் வேகமாகப் பரவி வரும் சூழலில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு கடந்த சில நாட்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து
வருகிறது. இந்நிலையில் தேவையுள்ள இடங்களுக்கு மருத்துவப் பணியாளர்கள், மருந்துகள்மற்றும் மருத்துவ சாதனங்களை
வான்வழியே விரைவாக கொண்டுசெல்ல இந்திய விமானப்படை முன்வந்தது.

ராஜஸ்தானின் ஜோத்பூரில் இருந்து குஜராத்தின் ஜாம் நகருக்கு ஆக்சிஜன் நிரப்புவதற்காக 2 காலி டேங்கர்களை இந்திய விமானப் படையின் சி-17 ரக விமானம் நேற்று கொண்டு சென்றது. இதுபோல் உ.பி.யின் ஹிண்டன் விமானதளத்தில் இருந்து மற்றொரு விமா
னம் மகாராஷ்டிர மாநிலம் புனே சென்றது. ஆக்சிஜன் டேங்கர்களை கொண்டு செல்லும் பணியில் விமானப் படை விமானங்கள் நேற்று முன்தினமும் ஈடுபட்டன.

இதனிடையே இந்திய விமானப் படையின் சி-17 ரக விமானம் நேற்று அதிகாலையில் ஹிண்டன் விமான தளத்தில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சென்றது. அங்கிருந்து 4 ஆக்சிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை மேற்கு வங்கத்தின் பனகர் விமானப் படை தளத்தில் தரையிறங்கியது. சிங்கப்பூர் தவிர ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தும் ஆக்சிஜன் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், அதற்கான சாத்தியமான வழித்தடங்களை கண்டறியுமாறு வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களிடம் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் பாதுகாப்பு அமைச்சகத்தின் முயற்சிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு செய்தார்.

குத்தகைக்கு ஹெலிகாப்டர்கள்

நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க சிங்கப்பூரில் இருந்து திரவ ஆக்கிஜன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் இந்திய விமானப் படையின் சி-17 ரக விமானத்தில் நேற்று திரவ ஆக்சிஜன் டேங்க் ஏற்றும் பணி நடைபெற்றது. படம்: பிடிஐ இதனிடையே வெளிநாட்டில் இருந்து 24 கடற்படை பயன்பாட்டு ஹெலிகாப்டர்களை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கும் நடைமுறையை இந்திய கடற்படை நேற்று முன்தினம் தொடங்கியது.

இது தொடர்பாக வெளிநாட்டு விற்பனையாளர்களுக்கு, தகவலுக்கான கோரிக்கையை (ஆர்எப்ஐ) இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x