Last Updated : 24 Apr, 2021 12:29 PM

 

Published : 24 Apr 2021 12:29 PM
Last Updated : 24 Apr 2021 12:29 PM

உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட என்.வி. ரமணா | படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

உச்ச நீதிமன்றத்தின் புதிய மற்றும் 48-வது தலைமை நீதிபதியாக நுதளப்பட்டி வெங்கட ரமணா(என்.வி.ரமணா) என்று குடியரசுதலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் எளிமையான முறையில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், உயர் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். கரோனா வைரஸ் பரவல் காரணமாக எளிமையான முறையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.பாப்டே தனது பதவிக் காலம் முடியும் தருவாயில் தனக்குப்பின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி என்.வி. ரமணாவை நியமிக்கலாம் என மத்தியஅரசுக்கு பரிந்துரைத்தார்.

இதையடுத்து, மத்திய அரசு ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய நிலையில், கடந்த 6-ம் தேதி புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்ததைத் தொடர்ந்து, என்.வி.ரமணா இன்று (24-ம் தேதி) முறைப்படி புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ராம்நாத் கோவிந்த், ரமணாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

2022ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதிவரை என்.வி.ரமணா பதவியில் இருப்பார். ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தலைமை நீதிபதியாக வரும் முதல் நீதிபதி ரமணா என்பது குறிப்பிடத்தக்கது

உச்ச நீதிமன்றத்தில் மிக மூத்த நீதிபதியாக இருக்கும் என்.வி.ரமணா, கடந்த 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி ஆந்திரப்பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பொன்னாவரம் எனும் கிராமத்தில் எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 1983-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வழக்கறிஞராக என்.வி.ரமணா தன்னை பதிவு செய்து கொண்டார்.

ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 2000-ம் ஆண்டு ஜூனில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 2014-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டபின், அங்கு இணையதள பிராண்ட்பேன்ட் இணைப்பு ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ரமணா, இணையதள உரிமையும் அடிப்படை உரிமைதான் எனத் தீர்ப்பளித்து, மீண்டும் இணைதள இணைப்பை வழங்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x