Last Updated : 24 Apr, 2021 12:05 PM

 

Published : 24 Apr 2021 12:05 PM
Last Updated : 24 Apr 2021 12:05 PM

டெல்லி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் 20 பேர் உயிரிழப்பு: ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீண்டும் துயரம்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக கரோனா நோயாளிகள் 20 பேர் நேற்று இரவு உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே டெல்லி கங்காராம் மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் கரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிரிழந்த நிலையில் அடுத்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு காப்பாற்ற முடியாமல் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

தடுப்பூசி பற்றாக்குறையும் பல மாநிலங்களில் நிலவுகிறது. இதைச் சரிசெய்ய மத்திய அரசும் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு 20 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குநர் டி.கே. பலூஜா கூறுகையில் “எங்களுக்கு 3.5 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மத்திய அ ரசு ஒதுக்கியது.

ஆனால், எங்களுக்கு மாலை 5 மணிக்கு கிடைத்திருக்க வேண்டும், ஆனால், கிடைக்கவில்லை. நள்ளிரவில்தான் அதுவம் 1500 லிட்டர் ஆக்ஸிஜன்தான் நிரப்பட்டது. ஆனால், அந்த ஆக்ஸிஜன் கரோனா நோயாளிகளுக்குப் போதுமானதாக இல்லை என்பதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகள் 20 பேர் உயிரிழந்துவிட்டனர்

இன்னும் மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை தொடர்பாக டெல்லி அரசுக்கு அவசரச் செய்தி அனுப்பியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.


முன்னதாக டெல்லியில் உள்ள மூல்சந்த் மருத்துவமனை சார்பில் பிரதமர் மோடிக்கும், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ஆகியோருக்கு ட்விட்டரில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதில் “ 130-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 மணி நேரத்துக்கு மட்டுமே ஆக்ஸிஜன் இருப்பு இருக்கிறது. ஏராளமான அதிகாரிகளை தொடர்பு கொண்டு சோர்வடைந்துவிட்டோம், யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தயவு செய்து உதவுங்கள்” எனத் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக பல்வேறு மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் சப்ளையில் தடை ஏற்பட்டு, போதுமான அளவில் கிடைக்கவில்லை. படுக்கை வசதியில்லை, மருந்துகள் பற்றாக்குறை போன்றவை இருக்கிறது. இவை ஒருபக்கம் இருக்க நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது டெல்லி சுகதாார அமைப்பையே ஸ்தம்பிக்க வைத்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x