Last Updated : 24 Apr, 2021 10:06 AM

 

Published : 24 Apr 2021 10:06 AM
Last Updated : 24 Apr 2021 10:06 AM

கரோனா சோகம்: தந்தை இறந்தது தெரியாமல் மருத்துவமனைக்கு பழங்கள் அனுப்பிய மகன்: உடலுக்கு பதில் இறப்பு சான்றிதழ் அளித்த மருத்துவமனை

புதுடெல்லி

உத்தரப்பிரதேசத்தின் ஒரு மருத்துவமனையில் தன் தந்தை இறந்தது தெரியாமல் நான்கு நாட்களாக அவருக்கு மகன் பழங்கள் அனுப்பியுள்ளார். உண்மை அறிந்த பின் அணுகிய மகனிடம் உடலுக்கு பதிலாக அவரது தந்தையின் இறப்பு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

பிரயாக்ராஜ் மாவட்டத்தின் அலகாபாத்திலுள்ள துமன்கன்ச் பகுதியை சேர்ந்தவர் லால் ஸ்வரூப். இவர், தனது உடல்நலம் குன்றிய 82 வயது தந்தை பச்சி லாலை அலகாபாத்தின் ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையில் சேர்த்திருந்தார்.

ஏப்ரல் 12 முதல் கரோனா சிகிச்சையில் இருந்த தந்தையை அன்றாடம் சந்திக்க மகன் ஸ்வரூப் அனுமதிக்கப்படவில்லை. நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மட்டும் ஸ்வரூபால் தன் தந்தையை பார்க்க முடிந்தது.

எனினும், அவருக்கு தேவையானப் பழங்கள் உள்ளிட்ட உணவு வகைகளை மருத்துவமனைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் ஸ்வரூப். பிறகு கடந்த ஏப்ரல் 19 இல் மருத்துவமனை சென்ற லால் ஸ்வரூபிற்கு தன் தந்தையின் படுக்கையில் வேறு ஒருவர் இருந்துள்ளார்.

அங்குள்ள செவிலியர்களிடம் விசாரித்த போது பச்சி லால், வேறு பிரிவிற்கு மாற்றப்பட்டதாகக் கூறியுள்ளனர். அப்பிரிவிற்கு சென்றும் தன் தந்தையை காணாமல் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் ஸ்வரூப் புகார் செய்துள்ளார்.

இதன் விசாரணையில் பச்சி லால் ஏப்ரல் 17 இல் இறந்து விட்டதாகத் தெரிந்துள்ளது. அதன் பிறகு லால் ஸ்வரூபிடம் அவரது தந்தையின் உடலுக்கு பதிலாக இறப்பு சான்றிதழ் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பச்சி லாலை ஒரு அனாதையாகக் கருதி மருத்துவமனையினரே இறுதிசடங்கு செய்திருப்பது காரணமானது. இதையடுத்து லால் ஸ்வரூப் அம்மருத்துவனையினர் மீது அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இதில் அவர் தன் தந்தை இறந்தது தெரியாமல் மருத்துவமனைக்கு நான்கு நாட்களாகப் பழங்கள் அனுப்பிக் கொண்டிருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x