Published : 24 Apr 2021 03:14 AM
Last Updated : 24 Apr 2021 03:14 AM
கேரளாவைச் சேர்ந்த நடிகை சரிதா நாயர், சூரிய மின்சக்தி வசதி செய்து தருவதாகக் கூறி சோலார் பேனல் எனப்படும் சூரியஒளி தகடுகள் அமைத்துத் தரும் நிறுவனத்தின் இயக்குநராக இருந்து பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சரிதா நாயர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கோழிக்கோடைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர் 2012-ல் போலீஸில் அளித்த புகாரில் சரிதா நாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோர் சோலார் பேனல் வசதி செய்து தருவதாக கூறி ரூ.42.70 லட்சம் பெற்றதாகவும் ஆனால், சொன்னபடி செய்யாததோடு பணத்தையும் திருப்பித் தரவில்லை என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பான வழக்கு கோழிக்கோடு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் விசாரணைக்கு சரிதா நாயர் பல முறை ஆஜராகவில்லை.
கடந்த பிப்ரவரி மாதமே இவ்வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிப்பதாக இருந்தது ஆனால், சரிதா நாயர் ஆஜராகாததால் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கில் ஆஜராகாததால் சரிதா நாயருக்கு எதிராக கோழிக்கோடு நீதிமன்றம் கைது செய்வதற்கான பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் சரிதா நாயரை அவரது வீட்டில் போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT