

ராஜஸ்தான் மாநிலத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஐந்து மடங்கு பணத்தை வாரி கொடுத்த ஏடிஎம் மையத்தை ஏராளமான வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் அஜித்கர் என்ற பகுதியில் ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. கடந்த திங்கள்கிழமை பணம் எடுப்பதற் காக இந்த ஏடிஎம் மையத்துக்கு வந்த ஒரு வாடிக்கையாளர், தன் கணக்கு எண்ணை பதிவு செய்து ரூ.100 எடுக்க முயன்றபோது, ஏடிஎம் இயந்திரம் அதனை ரூ.500 ஆக அள்ளி வழங்கியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த வாடிக்கையாளர், இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த ஏடிஎம் மையத்துக்கு வந்த பிற வாடிக்கையாளர்களும் ஐந்து மடங்கு அளவுக்கு பணத்தை எடுத்துச் சென்றனர்.
இதனால் அந்த ஏடிஎம் மையத்தில் பணத்தை எடுக்க ஏராளமானோர் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த போலீஸார் இந்த காட்சியை கண்டு சந்தேகம் அடைந்தனர். பின்னர் விசாரணையில் உண்மை தெரிய வந்ததை அடுத்து, அந்த ஏடிஎம் மையத்தை மூடி, வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இயந்திரத்தை சரிபார்க்கும் தொழில்நுட்ப குழு அப்பகுதிக்கு செவ்வாய்கிழமை தான் வர முடியும் என வங்கி தெரிவித்ததால், இரவு முழுவதும் பாதுகாப்புக்கு காவலர் நிறுத்தப் பட்டார்.
மறுநாள் தொழில்நுட்ப குழுவினர் வந்து ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனர். இதற்கிடையில் அந்த ஏடிஎம் மையத்தில் இருந்து கூடுதல் பணம் எடுத்துச் சென்ற வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற வங்கி சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.