இந்தியாவில் கரோனா பாதிப்பு புதிய உச்சம்; முன்னெப்போதும் இல்லாமல் 3.32 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தொற்று: 2,263 பேர் உயிரிழப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

இந்தியாவில் இதற்கு முன் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3.32 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 2,263 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 24 லட்சத்து 28 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தத் தொற்றில் 14.93 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து ஒரு கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்து 159 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் சதவீதம் 83.92 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 568 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 306 பேரும், சத்தீஸ்கரில் 207 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 195 பேரும், குஜராத்தில் 135 பேரும், கர்நாடகாவில் 123 பேரும், ஜார்க்கண்டில் 106 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 27 கோடியே 44 லட்சத்து 45 ஆயிரத்து 653 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 17 லட்சத்து 40 ஆயிரத்து 550 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in