Published : 22 Apr 2021 07:08 PM
Last Updated : 22 Apr 2021 07:08 PM

காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பல்: கண்டறியும் பணியில் இந்திய கடற்படை

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இந்தோனேசியாவின் நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியில் ஒத்துழைக்க தனது ஆழ்கடல் நீர்மூழ்கி மீட்புக் கப்பலை (டிஎஸ்ஆர்வி) இன்று (வியாழக்கிழமை) இந்திய கடற்படை அனுப்பி வைத்தது.

ஏப்ரல் 21 அன்று சர்வதேச நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு அமைப்பு, காணாமல் போன இந்தோனேசியாவின் நீர்மூழ்கிக் கப்பல் குறித்து இந்திய கடற்படைக்கு தகவல் அளித்தது.

பாலியில் இருந்து 25 மைல் வடக்கில் 53 குழுவினருடன் அந்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி மேற்கொண்டிருந்தது.

நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று காணாமல் போனாலோ அல்லது தண்ணீரில் மூழ்கினாலோ, சிறப்பு உபகரணங்களைக் கொண்டு காணாமல் போன கப்பலையும், அதில் பயணம் செய்த குழுவினரையும் மீட்கும் பணியில் நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காணாமல் போகும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆழ்கடல் நீர்மூழ்கி மீட்புக் கப்பலின் உதவியோடு மீட்டெடுக்கும் திறன் கொண்ட ஒரு சில நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. இந்திய கடற்படையின் டிஎஸ்ஆர்வி-யின் நவீன தொழில்நுட்பக் கருவிகளினால்1000 மீட்டர் ஆழம் வரை சென்று நீர்மூழ்கிக் கப்பலை கண்டறிய முடியும்.

இந்தியா, இந்தோனேசியா நாடுகளுக்கு இடையேயான விரிவான கேந்திர கூட்டமைப்பின் கீழ் இரு நாடுகளின் கடற்படையும் வலுவான உறவை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x