கோழிகள் முட்டை இடாததால் போலீஸில் புகார் அளித்த விவசாயி

கோழிகள் முட்டை இடாததால் போலீஸில் புகார் அளித்த விவசாயி
Updated on
1 min read

மகாராஷ்டிரா மாநிலம் புணேவைச் சேர்ந்தவர் மகேஷ் குமார். கால்நடை விவசாயியான இவர், தனது பண்ணையில் உள்ள கோழிகள் 6 மாதங்களுக்கு மேலாக முட்டை இடாததால் அதிர்ச்சி அடைந்தார்.

கால்நடை மருத்துவர் கோழிகளை பரிசோதித்த போது அவை உட்கொண்ட தீவனத்தின் காரணமாகவே முட்டை போடும் திறனை இழந்துள்ளதாக கூறியிருக்கிறார்.

இதையடுத்து மகேஷ் குமார், தான் கோழி தீவனம் வாங்கிய நிறுவனத்தின் மீது லோனி கல்போர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தீவனத்தை உண்ட பின்னரே தமது கோழிகள் முட்டை இடவில்லை என்றும், எனவே அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது புகார் மனுவில் அவர் கூறியிருந்தார்.

விசித்திரமான புகாராக இருந்த தால், வழக்கு பதிவு செய்யாத போலீஸார், கால்நடை நிபுணர் களுடன் ஆலோசனை நடத்தினர். இதில், சில தீவனங்களை உட்கொண்டால் கோழிகள் சிறிது காலத்துக்கு முட்டை போடாது என்றும், பழைய தீவனத்தை கொடுத்தால் பிரச்சினை சரியாகும் என்று கால்நடை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கால்நடை தீவன தயாரிப்பு நிறுவனத்தை போலீஸார் தொடர்பு கொண்டு, இந்தப் புகார் பற்றி கூறியுள்ளனர். அப்போது, புகார் அளித்த விவசாயி மகேஷ் குமாருக்கு உரிய இழப்பீடு வழங்குவதாக அந்நிறுவனம் உறுதி அளித்தது. இதையடுத்து, தனது புகாரை மகேஷ் குமார் திரும்பப் பெற்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in