Last Updated : 21 Apr, 2021 03:15 AM

 

Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

பஞ்சாப், ஹரியாணாவில் கோதுமைக்கான எம்எஸ்பியை முதன் முறையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்திய அரசு

வடமாநில விவசாயிகள் கடந்த ஏப்ரல் 1 முதல் அறுவடை செய்யும் சம்பா கோதுமை கொள்முதலை மத்திய அரசின் இந்திய உணவு கழகம் (எப்சிஐ) தொடங்கி உள்ளது. இதற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை முதன்முறையாக பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் நேரடி பணப் பரிமாற்ற முறையில் செலுத்தப்படுகிறது. இதுகுறித்து எப்சிஐ ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பஞ்சாப் விவசாயிகளுக்கு கடந்த 16-ம் தேதி வரை எம்எஸ்பி தொகையான ரூ.13.71 கோடி அவர்களது வங்கிக்கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. ஹரியாணா மாநில விவசாயிகளுக்கு எம்எஸ்பி தொகையாக ரூ.735 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாநில அரசுகளுமே இதற்கு முன்பு நேரடி பணப் பரிமாற்ற முறையில் தொகையை செலுத்த அனுமதி மறுத்து வந்தன. இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டி கடந்த 2015-16-ம் வருடம் முதல் எப்சிஐ வலியுறுத்தி வந்தது. இதில் பஞ்சாப் மட்டும் இந்த வருடமும் நேரடி பணப் பரிமாற்றத்திற்கு ஒப்புக்கொள்ள மறுத்ததை மத்திய அரசு ஏற்கவில்லை.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’நாளேட்டிடம் மத்திய உணவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, "இதற்கு முன் எப்சிஐ-க்கான கொள்முதலை தனியார் நிறுவனங்களும் கமிஷன் அடிப்படையில் செய்து வந்தன. இதில், அந்நிறுவனங்கள் குறித்த காலத்தில் விவசாயிகளுக்கு பணம் செலுத்தவில்லை என்ற புகாரால் இந்த வருடம் முதல் அப்பணி மாநில அரசுகளுக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மத்திய அரசின் ‘ஒருநாடு, ஒரு எம்எஸ்பி, ஒரே வகையில் நேரடி பணப் பரிமாற்றம்’ எனும் கொள்கை அமலாக்கத் தொடங்கி உள்ளது" என்றனர்.

இந்த வருடம் சம்பா கோதுமையின் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,975 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்த விலையில் இரண்டு யூனியன் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் எப்சிஐ தன் கொள்முதலை தொடங்கி உள்ளது.

இதன் முதல் இடத்தில் அதிக கோதுமை விற்பனை செய்தவர்களாக ஹரியாணா விவசாயிகள் உள்ளனர். இந்த வருடம் எப்சிஐ இதுவரை 81.64 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x