Published : 19 Apr 2021 08:14 PM
Last Updated : 19 Apr 2021 08:14 PM

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி: மத்திய அரசு

கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை அச்சுறுத்திவரும் நிலையில், நாட்டில் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று பலகட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா தடுப்பூசி தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

அதன்படி 3-வது கட்ட தடுப்பூசித் திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதியன்று கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கியது. முதற்கட்டமாக மருத்துவ, சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது அதேபோல் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.

இரண்டாவது தவணையாக 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் இல்லாதோர் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 3-வது தடுப்பூசி திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் 5 தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை தடுப்பூசித் திருவிழா நடத்தப்பட்டதில் மக்கள் போதிய விழிப்புணர்வு பெற்று தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், அரசு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்திருப்பதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், கரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகளே நேரடியாக மருந்து நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x