Last Updated : 19 Apr, 2021 06:17 PM

 

Published : 19 Apr 2021 06:17 PM
Last Updated : 19 Apr 2021 06:17 PM

உங்கள் ஆலோசனையை உங்கள் கட்சியினரை பின்பற்றச் சொல்லுங்கள்: மன்மோகன் சிங்கிற்கு ஹர்ஷ்வர்த்தன் பதிலடி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் : கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா தடுப்பூசி குறித்து சந்தேகத்தை காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள்தான் தீவிரமாக எழுப்புகின்றன, கரோனா 2-வது அலை அவர்களால் தான் தீவிரமாகப் பரவுகிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் பதில் அளித்துள்ளார்.

கரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை சமாளிக்க 5 அம்ச வழிமுறைகளை குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் பதில்அளித்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் துணிச்சலாகப் போரிடுவதற்கு தடுப்பூசி முக்கியம் என்பதை நீங்கள் (மன்மோகன்சிங்) ஒப்புக்கொண்டுள்ளீர்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள், தடுப்பூசி குறித்து பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை கூறுவதன் விளைவாக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயே முன்களப்பணியாளர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் தடுப்பூசி போடும் சதவீதம் தேசிய சராசரிக்கும் குறைவாக இருக்கிறது.

உங்கள் கட்சியில் பொறுப்புள்ள பதவியில், மாநில அரசு நிர்வாகத்தில் இருக்கும் சிலரிடம் ஏன் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவில்லை. உங்கள் ஆலோசனைகளை முதலில் உங்கள் கட்சியினரை பின்பற்றச் சொல்லுங்கள்.

கரோனா தடுப்பூசி கண்டுபிடித்தது குறித்தும், எந்த சூழலில் கண்டுபிடிக்கப்பட்டது குறித்தும் இதுவரை காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், நமது விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

நமது அறிவியல் விஞ்ஞானிகளுக்கு நன்றி கூறாமல் இருப்பது ஒருபக்கம் இருந்தாலும், தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், சிலர், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், கரோனா தடுப்பூசியின் செயல்படும் தன்மை குறித்து தரக்குறைவாக பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள்.

மக்களிடம் தடுப்பூசி குறித்த வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள். இதன் மூலம் மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டால் உயிரிழப்புதான் அதிகரிக்கும்

உங்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர், மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஒரு தலைவர், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி குறித்து பல சந்தேகங்களை எழுப்பி வித்தியாசமான உலக சாதனை படைத்தார். ஆனால், சில தலைவர்கள் பொதுவெளியில் கரோனா தடுப்பூசி குறித்து வெளிப்படையாக அவதூறாகப் பேசிவிட்டு, ரகசியமாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

உங்களிடம் இருந்து சிறந்த ஆலோசனைகளை இதுபோன்ற தலைவர்களுக்கு தனிப்பட்ட முறையில்கூட நீங்கள் வழங்கி அவர்கள் சிறந்த ஒத்துழைப்பை தர உதவலாம். இன்னும் நீங்கள் அவர்களுக்கு அறிவுரை கூறவில்லை அவர்களுக்கு அறிவுரை வழங்கினாலும் அது வேதனையில்தான் முடியும்

கரோனா வைரஸ் தடுப்பூசி என்பது மக்களின் எண்ணிக்கை வைத்து மதிப்பிடாமல் சதவீதத்தை வைத்து மதிப்பிட வேண்டும் என்று மன்மோகன் சிங் கூறியது தவறானது. இது ஒரு செயல்முறை என்பதால் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்பட வேண்டும், உங்கள் கட்சியில் உள்ள இளையவர்கள் கூட உங்கள் ஆலோசனையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

கரோனாவில் பாதிக்கப்பட்டோர், சிகிச்சையில் இருப்போர், இறப்புவீதம் ஆகியவற்றைப் பற்றி மட்டுமே பேசும் காங்கிரஸ் கட்சி, தடுப்பூசி எத்தனை கோடி மக்களுக்கு சென்றடைந்துள்ளது குறித்து பேசுவதில்லை.

உங்களின் கட்சி எதிர்மறையான கருத்துக்களை பரப்பினாலும் உங்களின் மேலான ஆலோசனைகளை உங்களின் முகமதிப்புக்காகவும், தேசத்தின் நலன் கொண்டு கூறியதற்காகவும் நான் எடுத்துக்கொள்கிறேன்.

பொதுதுத்தளத்தில் ஏற்கெனவே அனைத்து விவரங்களும் இருக்கும்நிலையில், உங்களை கடிதம் எழுதச் செய்தவர்கள் அல்லது ஆலோசனை கூறியவர்கள், உங்களின் நிலைப்பாட்டுக்கு மிகப்பெரிய அவமதிப்பை செய்து உங்களை தவறாகவும் வழிநடத்தியுள்ளார்கள்.

தொற்றுநோய்க்கு எதிரான போரில் உங்கள் தொடர்ச்சியான ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம், இதுபோன்ற ஒளிதரும் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். ஒரு மூத்த தலைவராக, உங்கள் சொந்த கட்சித் தலைவர்களுக்கும் அதே ஆலோசனையையும் அறிவுரைகளையும் வழங்குவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்
இவ்வாறு ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x