Last Updated : 19 Apr, 2021 02:21 PM

 

Published : 19 Apr 2021 02:21 PM
Last Updated : 19 Apr 2021 02:21 PM

கரோனா வைரஸ் மட்டும் கையில் கிடைத்தால், பாஜக தலைவர் பட்னாவிஸ் வாய்க்குள் திணித்துவிடுவேன்: சிவசேனா எம்எல்ஏ கோபம்

ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிய விவகாரத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவந்திர பட்னாவிஸ் வாய்க்குள் கரோனா வைரஸை திணித்துவிடுவேன் என்று சிவேசனா கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து உயிர்காக்கும் மருந்தாக இருப்பதால் அதை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த சனிக்கிழமை தடை விதித்தது. ஆனால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்ய இருப்பதாக எழுந்த தகவலையடுத்து, மும்பை போலீஸார் அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.

இந்தத் தகவல் அறிந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், காவல்நிலையம் சென்று போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்த மருந்து நிறுவன உரிமையாளரை விடுக்கக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த சம்பவத்தில் பாஜக மூத்த தலைவர் மீது கடும் கோபத்துடன் சிவசேனாவின் புல்தானா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் பேசியுள்ளார். கெய்க்வாட் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சிவசேனா எம்எல்ஏ கெய்க்வாட், பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்,

தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக இருந்திருந்தால் இந்நேரம் என்ன செய்திருப்பார். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதைவிடுத்து, மகாராஷ்டிராவில் ஆளும் மகாவிகாஸ் அகாதி எவ்வாறு வீழும், தோல்விஅடையும் என்று ரசித்துக்கொண்டும், கேலி செய்து கொண்டும் பட்னாவிஸ் இருக்கிறார்.

இந்தநேரம் என் கண்களுக்கு கரோனா வைரஸ் மட்டும் தெரிந்தால், அதை எடுத்து பட்னாவிஸ் வாய்க்குள் திணித்துவிடுவேன்.

ரெம்டெசிவிர் மருந்தை மக்களுக்கு வழங்குவதில் பாஜக தலைவர்கள் பிரவீண் தரேக்கர், சந்திரகாந்த் பாட்டீல் இருவரும் அற்பத்தனமான அரசியல் செய்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் செயல்படும் மருந்து நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்துகளை அரசுக்கு வழங்கக்கூடாது என்று மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. எங்கள் மக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் வழங்கவில்லை.

ஆனால்,குஜராத் மாநிலத்துக்கு ரெம்டெசிவிர் மருந்தை 50 ஆயிரம் எண்ணிக்கையில் அனுப்புகிறார்கள். பல மருந்து நிறுவனங்கள் பாஜக அரசுக்கு இந்த மருந்தை இலவசமாக அனுப்பி வைத்துள்ளன. மகாராஷ்டிராவில் மக்கள் கரோனாவில் மாண்டுவரும்போது, இங்குள்ள பாஜக அலுவலகத்திலிருந்து ஆயிரக்கணக்கில் ரெம்டெசிவிர் மருந்து குஜராத் அனுப்பப்படுகிறது.

இதுபோன்ற அற்பத்தனமான அரசியலைத்தான் தற்போது மத்திய அரசும், பட்னாவிஸும் செய்கிறார்கள். இதுதான் அரசியல் செய்யும் நேரமா, மத்திய அரசும், பட்னாவிஸும் தங்களின் செயல்களால் வெட்கப்பட வேண்டும்.
இவ்வாறு கெய்க்வாட் தெரிவித்தார்.

இந்நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் குறித்து அவதூறகப் பேசியதைக் கண்டித்து, மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில் பாஜகவினர், சிவசேனா எம்எல்ஏ கெய்க்வாட் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x