Last Updated : 19 Apr, 2021 12:31 PM

 

Published : 19 Apr 2021 12:31 PM
Last Updated : 19 Apr 2021 12:31 PM

ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிய மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்னாவிஸ்; மனிதநேயத்துக்கு எதிரான குற்றம்: பிரியங்கா காந்தி சாடல்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா | கோப்புப்படம்

புதுடெல்லி


கரோனா வைரஸ் பரவல் காலத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிய மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் செயல், மனிதநேயத்துக்கு விரோதமானது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து உயிர்காக்கும் மருந்தாக இருப்பதால் அதை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த சனிக்கிழமை தடை விதித்தது. ஆனால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்ய இருப்பதாக எழுந்த தகவலையடுத்து, மும்பை போலீஸார் அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.

இந்தத் தகவல் அறிந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், காவல்நிலையம் சென்று போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்த மருந்து நிறுவன உரிமையாளரை விடுக்கக் கோரினார். பாஜக தலைவர்கள் கேட்டுக்கொண்டதால், தான் ரெம்டெசிவிர் மருந்தை மகாராஷ்டிராவுக்கு வழங்குகிறேன் என மருந்து நிறுவன உரிமையாளர் தெரிவித்தார்

அப்போது தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில் “ 4 நாட்களுக்கு முன் பரக் பார்மா நிறுவனத்திடம் பேசி, மகாராஷ்டிராவுக்கு ரெம்டெசிவிர் மருந்தை அளிக்க கோரினோம்.ஆனால், மத்திய அரசிடம் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் இருந்ததால் உடனடியாக மத்திய அமைச்சர் மன்ஷுக் மாண்டவியாவிடம் பேசி, உடனடியாக அனுமதி பெற்றேன். ஆனால், இன்று இரவு 9 மணி அளவில் அந்த மருந்து நிறுவன உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்த நேரத்தில் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் மக்கள் ரெம்டெசிவிர் மருந்துக்காக அலைபாய்கிறார்கள், தங்களின் அன்புக்குரியவர்களின் உயிரைக் காக்க ஒரு சிறிய குப்பி மருந்துக்காக மக்கள் போராடுகிறார்கள்.ஆனால், பாஜகவைச் சேர்ந்த ஒரு மூத்த தலைவர், பொறுப்புள்ள பதவியில் இருப்பவர், ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கியது மனித நேயத்துக்கு எதிரான குற்றம்” எனச் சாடியுள்ளார்.

மேலும், பிரியங்கா காந்தி தனதுட்விட்டர் பக்கத்தில், “ மகாராஷ்டிரா பாஜக தலைவர்கள் சிலரும், தேவேந்திர பட்னாவிஸும் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யும்” வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்வதாக தகவல் அறிந்து அந்த மருந்து நிறுவன உரிமையாளரை போலீஸார் விசாரித்த போது அதைத் தடுத்து, பட்னாவிஸ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x