Published : 19 Apr 2021 11:44 AM
Last Updated : 19 Apr 2021 11:44 AM

மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.50 லட்சம் கோவிட் காப்பீடு திட்டம் : புதிய நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சு


கரோனா வைரஸ் காலத்தில் பணியாற்றும் மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 50 லட்சத்துக்கான காப்பீடு திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் 24-ம் தேதியுடன் ரத்து செய்துள்ளது. புதிய காப்பீடு நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சு நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸ் முதல் அலையின்போது கோவிட் நோயாளிகளை கையாளும் பணியில் இருக்கும் செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் திடீரென உயிரிழப்பைச் சந்தித்தால் அவர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு தரும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டத்தின் வழங்கப்பட்ட இந்த காப்பீடு திட்டத்தில் 22 லட்சம் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு காப்பீடாக ரூ.1.70 லட்சம் கோடியை மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தில் வார்ட் உதவியாளர்கள், ஆஷா பணியாளர்கள், பாராமெடிக்கல் பிரிவினர், தொழில்நுட்ப பணியாளர்கள், மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கும் காப்பீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த காப்பீடுத் திட்டம் கடந்த மாதம் 24-ம் தேதி முடிந்துவிட்டது. இதையடுத்து அந்த காப்பீடு திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து. புதிய நிறுவனத்துடன் காப்பீட்டுக்காக பேசி வருவதாக ஆங்கில நாளேடு ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கடந்த மாதம், சுற்றறிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கும் காப்பீடு திட்டத்தில் இன்னும் 287 விண்ணப்பதாரர்களின் கோரிக்கை பரிசீலனையில் இருக்கிறது.

இதற்கிடையே கரோனா வைரஸ் தடுப்பு பணியில் இறந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் குறித்த எந்த அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களும் இல்லை. ஆனால், இந்திய மருத்துவ அமைப்பின் புள்ளிவிவரங்கள்படி, 739 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர் அசோக் பூஷண் மாநிலங்களுக்கு கடந்த மாதம் 24-ம் தேதி எழுதிய கடிதத்தில், “கோவிட் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கரோனாவில் உயிரிழப்பைச் சந்தித்தால் அவர்களுக்கு நிதியுதவி வழங்கும் காப்பீடு திட்டம் சிறப்பாகச் செயல்பட்டது, அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தது.இந்த திட்டம் மார்ச் 24-ம் தேதியுடன் முடிந்துவிட்டது.

மார்ச் 24ம் தேதி நள்ளிரவு வரை காப்பீடு கோருபவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்துக்கு பயன் பெற தகுதியானவர்கள். இந்த காப்பீடு திட்டத்தில் விண்ணப்பித்து இருக்கும் தகுதியானவர்கள் தங்களின் ஆவணங்களை ஒரு மாதத்துக்குள் வழங்கிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டவுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல் 90 நாட்களுக்கு மட்டும் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கும் இந்த திட்டத்தை கடந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி கொண்டு வந்தார். ஆனால் கரோனா வைரஸ் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போது இந்தத் திட்டம் முடிந்துவிட்டதால், புதிய நிறுவனத்துடன் மத்தியஅரசு பேசி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்போது இந்த காப்பீடு திட்டம் மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்குத் புதிதாக மீண்டும் தொடங்கும் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.

கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருக்கும் நிலையில் தங்கள் உயிரை துச்சமாக மதித்து பணியாற்றும் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு விரைவாக புதிய காப்பீடு திட்டத்தை மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x