Last Updated : 19 Apr, 2021 09:16 AM

 

Published : 19 Apr 2021 09:16 AM
Last Updated : 19 Apr 2021 09:16 AM

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. அன்றாட தொற்று எண்ணிக்கை 2.6 லட்சத்தைத் தாண்டிப் பதிவாகிறது. இரண்டாவது அலையின் வீரியத்தால் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்து வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

கரோனா நோயாளிகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்துக் கொண்டே சென்றால் அதனால் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். நாங்கள் எந்தச் சூழ்நிலையிலும் மாநில அரசுகளுடன் துணை நிற்கிறோம்.

ஆனால், அதேவேளையில், மாநில அரசுகள் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்துவருகிறது. தேவையை எதிர்கொள்வது எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் தேவையைக் கட்டுப்படுத்துவதும் முக்கியம்.

நோயாளிகளுக்கு தேவைப்படும்போது மட்டுமே ஆக்ஸிஜன் பயன்படுத்த வேண்டும். தேவையில்லாதபோது ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுவதாக எனக்குத் தகவல்கள் கிடைக்கின்றன. ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மாநில அரசுகள் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக மகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதனைக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்த பியூஷ் கோயல், மத்திய அரசின் மீதான உத்தவ் தாக்கரேவின் குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல. இந்திய அரசு 110% ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத் திறனை அதிகரித்துள்ளது.

தொழிற்சாலைப் பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கூட மருத்துவப் பயன்பாட்டுக்காக திருப்பிவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதுவும் குறிப்பாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள 12 மாநிலங்களுக்கு 6177 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். அதிலும், மகாராஷ்டிராவுக்கு முன்னுரிமை அளித்து ரயில்வே பசுமை வழித்தடம் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் கொண்டு சேர்க்கப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக பிரதமர் மோடி ஒரு நாளில் 19 மணி நேரம் பணியாற்றி வருவதாக சுட்டிக்காட்டியதோடு கரோனா இரண்டாவது அலையை அரசியலாக்கக் கூடாது என்று கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x