Published : 19 Apr 2021 03:14 AM
Last Updated : 19 Apr 2021 03:14 AM

விரைவு சாலை அமைக்கும் பணி 2 ஆண்டில் முடியும்- டெல்லியில் இருந்து மும்பைக்கு12 மணி நேரத்தில் பயணிக்கலாம்

டெல்லியையும் மும்பையையும் இணைக்கும் வகையில் விரைவு நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதற்காக ஹரியாணாவில் லோஹ்தகி என்ற கிராமத்தில் இதற்காக பிரம்மாண்ட இயந்திரங்கள் இயங்கி வருகின்றன. தொழிலாளர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்து வருகின்றனர். ரூ.90 ஆயிரம் கோடி செலவில் 1,350 கி.மீ. நீளமுள்ள இந்த சாலை ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்கள் வழியாக செல்கிறது. முதல்கட்டமாக டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் லால்சாட் வரையிலான பணிகள் வரும் டிசம்பர் 21-க்குள் நிறைவடையும்.

இந்த சாலை பணிகள் முடிந்தபின் டெல்லியில் இருந்து மும்பைக்கு 12 மணி நேரத்தில் செல்ல முடியும். மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் இந்த சாலையில் பயணிக்கலாம். மனிதர்களோ, விலங்குகளோ குறுக்கே வருவதை தடுக்கும் வகையில் சாலை முழுவதும் இரு புறங்களிலும் 6 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பப்படுகிறது.

இந்த எட்டு வழிச் சாலை எதிர்காலத்தில் 12 வழிச் சாலையாக மாற்றப்படும். அதற்கு தகுந்தாற்போல இரு புறங்களிலும் போதுமான இடம் விடப்படுகிறது. வனவிலங்குகள் சரணாலயத்தின் வழியே செல்லும் ஆசியாவின் முதல் விரைவுச்சாலையாக இதுஇருக்கும். போக்குவரத்து பாதிப்பை குறைக்கும் வகையில் முகுந்தா சரணாலயத்தின் வழியே செல்லும்போது நாட்டிலேயே முதலாவதாக எட்டு வழி சுரங்கப் பாதையாகவும் இது அமைய உள்ளது. விரைவுச் சாலை பணிகள் 2023-ம் ஆண்டு ஜனவரிக்குள் முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x