Last Updated : 18 Apr, 2021 09:17 PM

 

Published : 18 Apr 2021 09:17 PM
Last Updated : 18 Apr 2021 09:17 PM

கரோனா பரவலை தடுக்க ஏப்ரல் 30 வரை டெல்லியின் ஹசரத் நிஜாமுதீன் தர்கா மூடல்

புதுடெல்லி

கரோனா பரவலை தடுக்க டெல்லியின் ஹசரத் நிஜாமுதீன் அவுலியா தர்கா ஏப்ரல் 30 வரை மூடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை அந்த தர்காவின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

டெல்லியின் மிகவும் பழமையானதாக இருப்பது தர்கா ஷெரீப் ஹசரத் நிஜாமுதீன் அவுலியா. இங்கு நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் அன்றாடம் திரளாக வருவது உண்டு.

குறிப்பாக, இந்த தர்காவில் ரம்ஜான் மாதத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால், கரோனா பரவும் அபாயம் இருப்பதால் தர்காவின் நிர்வாகம் முக்கிய முடிவு எடுத்துள்ளது.

இதன்படி, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 30 வரை தர்காவை மூடி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது டெல்லியில் வேகமாகப் பரவி வரும் கரோனா காரணமாகி விட்டது.

இது குறித்து ஹசரத் நிஜாமுத்தீன் அவுலியா தர்கா நிர்வாகத்தின் தலைவரான அப்ஸர் அலி நிஜாமி கூறும்போது, ‘கரோனா தடுப்பு நடவடிக்கையாக தர்காவினுள் சமூக இடைவெளியுடன் முகக்கவசமும் கட்டாயமாக்கப்பட்டு அமலில் உள்ளது.

இருப்பினும், தலைநகரான டெல்லியில் அன்றாடம் பரவி வரும் கரோனாவால் இந்த முடிவை எடுக்க வேண்டியதாகி விட்டது. இதற்கு ஏப்ரல் 30 வரை தர்காவை மூடுவதாக சரியாக இருக்கும் எனக் கருதுகிறோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிஜாமுத்தின் பகுதியிலுள்ள இந்த தர்காவை சுற்றி பல்வேறு கடைகளும், தங்கும் விடுதிகளும் உள்ளன. தற்போதைய மூடல் அறிவிப்பால் தர்காவிற்கு வரும் முஸ்லிம்களை நம்பியுள்ள அவர்களுக்கு பெரும் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x