Published : 18 Apr 2021 06:20 PM
Last Updated : 18 Apr 2021 06:20 PM

கோவிட் முதல் அலைபோல் 2-வது அலையை எதிர்த்து போராட வேண்டியதும் முக்கியம்: பிரதமர் மோடி

புதுடெல்லி

கோவிட் பாதிப்பை தடுக்க அரசு மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

வாரணாசி மாவட்டத்தில் கொவிட்-19 நிலவரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், கொவிட் பரவலை தடுப்பது, கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொவிட் பரிசோதனை, படுக்கைகள், மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மனிதசக்தி உள்பட பல விஷயங்கள் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார்.

மக்களுக்கு முடிந்த அளவு அனைத்து உதவிகளையும் விரைவாக வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். கண்காணிப்பு மற்றும் பரிசோதனையை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். கோவிட் முதல் அலைபோல், 2வது அலையை எதிர்த்து போராட வேண்டியதும் முக்கியம் என்றார்.

ஒவ்வொருவரும் ‘‘இரண்டு கெஜ தூர இடைவெளி மற்றும் முகக்கவசம் கட்டாயம்’’ என்ற விதிமுறையை பின்பற்ற வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். தடுப்பூசி பிரசாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், 45 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரையும், தடுப்பூசி பற்றி அறிய செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

வாரணாசி மக்களுக்கு மிகுந்த அக்கறையுடன், முடிந்த அளவு அனைத்து உதவிகளையும் நிர்வாகம் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இந்த நெருக்கடியான நேரத்திலும், அவர்கள் தங்கள் கடமையை உண்மையுடன் செய்வதாக கூறினார்.

கடந்தாண்டு அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக் கொண்டு எச்சரிக்கையுடன் முன்செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வாரணாசி தொகுதியின் பிரதிநிதியாக, மக்களிடம் இருந்து தொடர்ந்து கருத்துக்களை பெற்றுவருவதாக பிரதமர் கூறினார். வாரணாசியில் கடந்த 5-6 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ உள்கட்டமைப்புகளின் விரிவாக்கம் மற்றும் நவீன மயம் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவியுள்ளது என அவர் கூறினார்.

அதேநேரத்தில், படுக்கைகள், ஐசியு மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை கிடைப்பது அதிகரிக்கப்படுகிறது, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள மனஅழுத்தத்தை போக்கும் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

‘காசி கோவிட் நடவடிக்கை மையம்’ அமைக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டதுபோல், அனைத்து துறைகளிலும் வாரணாசி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

‘‘பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை’’ முறையை பிரதமர் வலியுறுத்தினார். கரோனா முதல் அலையின் போது மேற்கொள்ளப்பட்ட அதே உத்தியை, தொற்றை முறியடிக்க தற்போது மீண்டும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

நோயாளிகளின் தொடர்புகளை கண்டறிதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பரிசோதனை அறிக்கைகளை விரைவில் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வீட்டு தனிமையில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து பொறுப்புகளையும் உணர்வு பூர்வமாக மேற்கொள்ள அவர் உத்தரவிட்டார்.

வாரணாசியில் உள்ள தன்னார்வ அமைப்புகள் அரசுடன் இணைந்து செயல்படுவதை பிரதமர் பாராட்டினார். அவர்கள் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என கூறிய அவர், கோவிட் நிலவரத்தை முன்னிட்டு இன்னும் அதிக கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கொவிட் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் பற்றி வாரணாசி மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் காணொலி காட்சி மூலம் பிரதமரிடம் தெரிவித்தனர். தொடர்புகளை கண்டறிவதற்கான கட்டுப்பாட்டு அறைகள் அமைத்தது, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பவர்களுக்கான கட்டுப்பாட்டு மையங்கள், பிரத்தியேக ஆம்புலன்ஸ் போன் எண்கள், கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து தொலைதூரத்திற்கு மருந்து அளிக்கும் வசதி, நகர்ப்புறங்களில் கூடுதல் விரைவு குழுக்கள் நியமனம் போன்ற விஷயங்கள் குறித்து பிரதமரிடம் விவரிக்கப்பட்டன.

கோவிட்டை தடுக்க 1,98,383 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், 35,014 பேர் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்த காணொலி காட்சி கூட்டத்தில், எம்.எல்.சி மற்றும் வாரணாசி கோவிட் மேலாண்மை பொறுப்பாளர் ஏ.கே.சர்மா, மண்டல தலைவர் தீபக் அகர்வால், காவல் ஆணையர் ஏ.சதீஷ் கணேஷ், மாவட்ட ஆட்சியாளர் கவுசல் ராஜ் சர்மா, மாநகராட்சி ஆணையர் கவுரங் ரதி, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் என்.பி.சிங், பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் கழக இயக்குனர் பேராசிரியர் பி.ஆர். மிட்டல், மாநில அமைச்சர்கள் நீல்காந்த் திவாரி மற்றும் ரவீந்திர ஜெய்ஸ்வால், ரோகானிய எம்எல்ஏ சுரேந்திர நாராயண சிங், எம்.எல்.சி.க்கள் அசோக் தவான் மற்றும் லட்சுமண் ஆச்சார்யா ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x