24 மணி நேரத்தில் 26 லட்சம் தடுப்பூசி;  மொத்த எண்ணிக்கை 12 கோடியைக் கடந்தது

24 மணி நேரத்தில் 26 லட்சம் தடுப்பூசி;  மொத்த எண்ணிக்கை 12 கோடியைக் கடந்தது
Updated on
1 min read

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12 கோடியைக் கடந்துள்ளது.

இன்று காலை 7 மணி வரை, 18,15,325 முகாம்களில்‌ 12,26,22,590 பயனாளிகளுக்குக் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலகளவில் மிக விரைவாக 92 நாட்களிலேயே 12 கோடி தடுப்பூசிகளை இந்தியா செலுத்தியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா 97 நாட்களிலும், சீனா 108 நாட்களிலும் இந்த இலக்கை அடைந்தன.

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 26 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

92-வது நாளான நேற்று (ஏப்ரல் 17, 2021), நாடு முழுவதும் 26,84,956 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, சத்திஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கோவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 78.56 விழுக்காடு பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 67,123 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 27,334 பேரும், தில்லியில் 24,375 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது 18,01,316 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 12.18 சதவீதமாகும்.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,28,09,643 ஆக (86.62%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,38,423 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in