Last Updated : 17 Apr, 2021 03:58 PM

 

Published : 17 Apr 2021 03:58 PM
Last Updated : 17 Apr 2021 03:58 PM

கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம் இருந்தால், இறப்புச் சான்றிதழிலும் படம் இருக்க வேண்டும்: நவாப் மாலிக் பேச்சு

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் | படம் ஏஎன்ஐ

மும்பை

கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடி படம் இருந்தால், கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் இறப்புச் சான்றிதழிலும் அவரின் படம் இருக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளருமான நவாப் மாலிக் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடி படம் இருக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்டர்வர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடி படம் இருந்தால், கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் இறப்புச் சான்றிதழிலும் மோடியின் படம் இருக்கவேண்டும்.

மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கும், தடுப்பூசியை கொண்டு வந்ததற்கும் தங்களுடைய அரசு காரணம் என்ற நற்பெயரை பெறுவதற்காக தடுப்பூசி சான்றிதழலில் தனது புகைப்படத்தை பதிவிட மோடி விரும்பினால், கரோனா உயிரிழப்புக்கும் அவர் பொறுப்பேற்று இறப்புச் சான்றிதழிலும் அவரின் படத்தை பதிவிட வேண்டும்.

நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் , உயிரிழப்பும் பெருமளவு அதிகரித்து வருகிறது. இறுதிச்சடங்கு செய்யும் எரியூட்டு மையத்தில் உடல்களை எரிக்க முடியாமல் வந்து குவிவதாக வீடியோக்கள் வலம் வருகின்றன. தங்கள் அன்புக்குரியவர்களுக்கு இறுதி அஞ்சலிசெலுத்திவிட்டு உடலை எரியூட்ட முடியாமல் மக்கள் வரிசையில் நிற்கும் வீடியோக்களும் வலம் வருகின்றன.

இந்த நிலைமை ஏற்பட்டதற்கு மத்திய அ ரசு பதில் அளிக்க வேண்டும். இந்த சூழல் ஏற்பட்டதற்கு பதில் அளி்க்காமல் மத்திய அரசு நழுவிச் செல்ல முடியாது.

மேற்கு வங்கத்தில் 5-வது கட்டத் தேர்தல் இன்று நடந்து வருகிறது. நாட்டில் நிலவிவரும் கரோனா சூழலைப் பார்த்து, வாக்காளர்கள் சமூக விலகலைக் கடைபிடித்து வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். வீட்டைவிட்டு வாருங்கள், விருப்பமான வாக்காளர்களுக்கு வாக்களித்து, ஜனநாயகத்தை வலிமையாக்குங்கள்.

இவ்வாறு நவாப் மாலிக் தெரிவித்தார்.

மேற்குவங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.இதில் ஏற்கெனவே 4 கட்டத் தேர்தல் நடந்த முடிந்த நிலையில் 5-வது கட்டத் தேர்தல் இன்று நடந்து வருகிறது. ஜல்பைகுரி, காலிம்பாங், டார்ஜ்லிங், நாடியா, நார்த் 24 பர்கானா, புர்பா பரத்மான் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடக்கிறது, 39 பெண் வேட்பாளர்கள் உள்பட 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x