

உத்தரபிரதேசத்தில் கரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுகிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் 2வது முறையாக பிடிபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உ.பி.யில் கரோனா பரவல் தீவிரமாக உள்ளது. வியாழக்கிழமையன்று ஒரே நாளில் 104 பேர் இறந்தனர். 22,439 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மே மாதம் 15-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என்றும் 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் முதல்முறை பிடிபடுபவர்களுக்கு ரூ.1,000 அபராதமும் 2-வது முறையாக பிடிபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.