Last Updated : 16 Apr, 2021 08:07 AM

 

Published : 16 Apr 2021 08:07 AM
Last Updated : 16 Apr 2021 08:07 AM

கரோனா வைரஸ் அதிகரிப்பால் அச்சம்: கும்பமேளா முன்கூட்டியே முடிவதாக நிரஞ்சனி அகாதா திடீர் அறிவிப்பு


கரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால் அச்சமடைந்த மடாபதிகள், சாதுக்கள், ஹரித்துவாரில் நடந்துவரும் கும்பமேளா திருவிழாவை நாளையுடன்(ஏப்ரல் 17) முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு கும்பமேளா திருவிழாவை 30 நாட்கள் மட்டும் நடத்திக்கொள்ள அகாதாக்கள் முடிவு செய்தனர். ஆனால், நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கும்பமேளாவில் கடந்த வாரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், மடாதிபதிகள் கூடி புனித நீராடினர்.

கடந்த 14ம் தேதி மட்டும் ஹரித்துவாரில் 43 லட்சம் பக்தர்கள் வந்து புனித நீராடியதாக, உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது.

உத்தரகாண்ட் சுகாதாரத்துறையினர், போலீஸார் என பலரும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை வலியுறுத்தியும், பெரும்பாலானோர் கரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்காமலும், முக்ககவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைபிடிக்காமலும் புனித நீராடினர் .

கடந்த 10ம் தேதி முதல் 15ம் தேதிவரை கும்பமேளாவுக்கு வந்திருந்த 2.35 லட்சம் பேருக்கு கரோனாபரிசோதனை செய்தது. இதில் முதல்கட்டமாக 2,171 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த பாதிப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் அச்சம் இருப்பதாக மாநில சுகாதாரத்துறையினர் எச்சரித்தனர்.

மேலும், மத்தியப்பிரதேச மகா நிர்வானி அஹாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கரோனா தொற்றால் கடந்த 13-ம் ேததி உயிரிழந்தார். கரோனா தடுப்பு விதிகளை மதிக்காமல் கும்பமேளாவுக்கு தொடர்ந்து பக்தர்கள் வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, 13 அகாராக்கள் ஒன்றான நிரஞ்சனி அகாதா, நாளையுடன் கும்பமேளாவை முடித்துக்கொள்வதாக திடீரென நேற்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நிரஞ்சனி அகாதிவின் செயலாளர் ரவி்ந்திர பூஜாரிமகாரா நேற்று நிருபர்களிடம் கூறுகையில் “ ஹரித்துவாரில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து கும்பமேளா திருவிழாவை 17-ம் தேதியுடன் முடித்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் காலத்தில் இதுபோன்று கூட்டம் கூடுவது முறையானது அல்ல.

வரும் 27-ம் தேதி 4-வது புனிதநீராடல் நடைபெறும் போது குறிப்பிட்ட சிலர் மட்டுமே வந்து நீராடுவார்கள். எங்களுடன் வந்திருந்த பலரும் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதால், கும்பமேளாவை முடிக்கிறோம்”எனத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு 4 புனித நீராடல் நடைபெற வேண்டும். இதில் ஹரித்துவாரில் கடந்த மார்ச் 11ம் தேதி முதல் நீராடலும், கடந்த 14-ம்தேதி இரு நீராடல்களும் நடந்தன. 4வது புனிதநீராடல் வரும் 27-ம் தேதி நடக்கிறது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x