Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM

சீனாவின் தந்திரங்கள் பலிக்காது: தலைமைத் தளபதி பிபின் ராவத் கருத்து

புதுடெல்லி

சீனாவின் தந்திரங்கள், இந்தியாவிடம் பலிக்காது என்று தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

காணொலி கருத்தரங்கில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

எல்லைக் கோட்டை மாற்ற சீனா மிக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. எல்லையில் தள்ளுமுள்ளு தந்திரத்தை கையாண்டது. எவ்வளவோ முயன்றும் சீனாவால், இந்தியாவை ஓர் அங்குலம்கூட அசைக்க முடியவில்லை.

இது என் வழி. இல்லையென்றால் யாருக்குமே வழிவிட மாட்டோம் என்பது சீனாவின் கொள்கையாக உள்ளது. அதேநேரம் இந்தியா, சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்படுகிறது. சர்வதேச சமுதாயம் இந்தியாவுக்கு பக்கபலமாக நிற்கிறது.

தற்போது சீனா வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவின் வங்கிகள், மின் விநியோகம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை சீர்குலைக்க முயற்சி செய்து வருகிறது. அனைத்து சவால்களையும் முறியடிக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது அங்கு வெற்றிடத்தை ஏற்படுத் தும். அந்த நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க பல்வேறு நாடு கள் முயற்சி செய்து வருகின்றன. இதை சர்வதேச நாடுகள் தடுக்க வேண்டும்.

சீனாவில் உய்குர் முஸ்லிம்களின் நிலைமை கவலையளிக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை மதம், நிற வேறுபாடு இன்றி அனைத்து சமுதாய மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு பிபின் ராவத் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x