Last Updated : 15 Apr, 2021 08:56 AM

 

Published : 15 Apr 2021 08:56 AM
Last Updated : 15 Apr 2021 08:56 AM

கரோனாவை பரப்பிவிட்டு ஓடிவிட்டார்கள்: பாஜகவை சாடிய மம்தா; பதிலடி கொடுத்த ஸ்மிருதி 

மேற்குவங்கத்தில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துகாக வெளியில் இருந்து ஆட்களைக் கூட்டிவந்து நோயைப் பரப்பிவிட்டு ஓடிப்போய்விட்டார்கள் என பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.

வடக்கு பெங்காலின் ஜல்பாய்குரி பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திரிணமூல் வேட்பாளர் மருத்துவர் பிரதீப் பர்மாவை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். ஆனால், பிரதீப் பிரச்சார மேடையில் இல்லை. அவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளார்.

பிரதீப்புக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பற்றி எதுவும் குறிப்பிடாத மம்தா, "மாநிலத்தில் கரோனா பரவல் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் கரோனா பரவுகிறது. யாருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தொற்று ஏற்படலாம்.

கடந்த முறை கரோனா பரவல் ஏற்பட்டபோது நீங்கள் அனைவரும் எங்கிருந்தீர்கள். தேர்தல் அறிவித்தவுடன் பிரச்சாரத்துக்காக வெளியிலிருந்து ஆட்களைக் கூட்டிவந்துவிட்டு, கரோனாவைப் பரப்பிவிட்டு ஓடிவிட்டீர்கள்.

அவர்கள் போகட்டும். மக்களே நீங்கள் எங்களுக்கு வாக்களியுங்கள்.

இந்திய அரசாங்கம் தடுப்பூசியை எல்லா மக்களுக்கும் சரியான நேரத்தில் போட்டிருந்தால் இன்று நாட்டில் இரண்டாவது அலை கரோனா பரவல் ஏற்பட்டிருக்காது" என்று கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, "மம்தாவை பிரதமர் தீதீ (வங்க மொழியில் அக்கா) என்றே அழைப்பார். ஆனால், அவரோ கரோனா பரவலுக்கு மோடி, அமித் ஷாவைக் காரணமாகக் கூறியுள்ளார். இது எனக்கு அதிச்சியளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x