Last Updated : 15 Apr, 2021 03:10 AM

 

Published : 15 Apr 2021 03:10 AM
Last Updated : 15 Apr 2021 03:10 AM

கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதால் ரம்ஜான் நோன்பு முறியாது: உ.பி.யின் தாரூல் உலூம் இப்தா மதரஸா 'பத்வா' விளக்கம்

புதுடெல்லி

முஸ்லிம்களின் புனித ரமலான் மாதம் நேற்று தொடங்கியது. இதில் அவர்கள் ஒரு மாதத்திற்கு உண்ணா நோன்பு இருப்பது வழக்கம். காலை சூரிய உதயத்திற்கு முன்பிலிருந்து மாலை சூரிய அஸ்தமனம் வரை ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் இந்த உண்ணா நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. மருந்து, மாத்திரைகள் கூட இந்த நோன்பு நேரத்தில் எடுத்துக் கொள்வதில்லை.

இந்நிலையில் இந்த நோன்பு இரண்டாவது முறைாக கரோனா பரவல் காலத்தில் வந்துள்ளது. தற்போது நாடு முழுவதிலும் மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். ஏற்கெனவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 30 நாட்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் எடுத்துக் கொள்கின்றனர்.

இந்த வகையில் நோன்பு நாட்களில் முஸ்லிம்கள் பலருக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.

இது தொடர்பாக பத்வா விளக்கம் அளிக்குமாறு உ.பி.யின் தாரூல் உலூம் இப்தா ஃபிராங்கி மெஹல் மதரஸாவிடம் மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த அபிதுர் ரஷீத் கித்வாய் என்பவர் கேட்டுள்ளார்.

இதற்கு இந்த மதரஸாவின் முப்தியான மவுலானா காலீத் ரஷீத் ஃபிராங்கி மெஹலி அளித்துள்ள பத்வா விளக்கத்தில், “இந்த தடுப்பூசி மருந்தானது நேரடியாக நம் உடலின் ரத்தத்தில் கலந்து விடுகிறது. இது மனித உடலின் வயிற்றுக்குள் செல்வதில்லை என்பதால் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் நோன்பு முறியாது” என்று தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலால் முஸ்லிம்கள் நோன்பு காலத்தில் எச்சரிக்கையாக இருக்கும் படியும் பல மவுலானாக்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.

நோன்பு காலங்களில் தொழுகைக்காக மசூதிகளில் கூடுவதை தவிர்க்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கு பதிலாக வீட்டிலேயே தொழுகை நடத்துவது பாதுகாப்பானது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x