Published : 27 Dec 2015 03:21 PM
Last Updated : 27 Dec 2015 03:21 PM
தெலங்கானாவில் மகா சண்டி யாகம் நடைபெறும் யாக சாலையில் இன்று மதியம் லேசான தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் எர்ரபல்லி என்ற பகுதியில் அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பண்ணை நிலம் உள்ளது. இங்குதான் மகா சண்டி யாகம் நடைபெறுகிறது.
உலக அமைதிக்காக தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மகா சண்டியாகத்தை நடத்தி வருகிறார். தனது சொந்தப் பணம் ரூ.20 கோடியை செலவிட்டு, அவர் இந்த யாகத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், யாகத்தின் இறுதி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சண்டி யாக பந்தலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
பந்தலில் தீப்பற்றியவுடம் மக்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர், அப்போது போலீஸார் மிகச் சாதுர்யமாக அனைத்து தடுப்பு வேலிகளையும் திறந்துவிட்டனர். இதனால் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.
யாகத்தின் இறுதி நாளான இன்று சிறப்புப் பூஜையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வதாக இருந்தது. இந்நிலையில் திடீர் தீ விபத்து காரணமாக குடியரசுத் தலைவர் விழாவில் கலந்து கொள்ளவில்லை என டி.எஸ்.பி. தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT