Last Updated : 14 Apr, 2021 10:07 AM

 

Published : 14 Apr 2021 10:07 AM
Last Updated : 14 Apr 2021 10:07 AM

நாடுமுழுவதும் புதிதாக 1,84,372 பேருக்குக் கரோனா தொற்று: ஒரே நாளில் 1027 பேர் பலி- 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகம்

கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் புதிதாக 1,84,372 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில், கரோனாவுக்கு 1027 பேர் பலியாகியுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் புதிதாக 1,84,372 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,73,825 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,23,36,036 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 13,65,704 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 1,027 பேர் பலியாகினர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,72,085 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரு நாள் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

11,11,79,578 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 11 முதல் 14 வரை தடுப்பூசித் திருவிழாவை பிரதமர் அறிவித்தார். மூன்றாம் நாளான நேற்று 26.46 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திங்கள்கிழமையை ஒப்பிடும்போது நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவு.

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 60,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 281 பேர் பலியாகியுள்ளனர். முன்னதாக மாநிலம் முழுவதும் ஊரடங்குக்கு நிகரான தடை உத்தரவுகளை அடுத்த 15 நாட்களுக்கு அமல்படுத்தி முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.

மகாராஷ்டிராவை அடுத்து கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்தராவில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x