Published : 13 Apr 2021 01:29 PM
Last Updated : 13 Apr 2021 01:29 PM

மம்தா பானர்ஜியை தொடர்ந்து பாஜகவின் ராகுல் சின்ஹாவுக்கு பிரச்சாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

ராகுல் சின்ஹா- கோப்புப் படம்

புதுடெல்லி

மேற்குவங்க தேர்தலில் அவதூறாக பேசியதாக பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹாவுக்கு 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இன்னமும் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்தநிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி அடுத்த 24 மணி நேரத்துக்கு பிரச்சாரத்தில் ஈடுபட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

மத ரீதியாகப் பேசியதாகவும், மத்தியப் படைகளுக்கு எதிராக வெகுண்டெழுமாறு வாக்காளர்களை தூண்டியதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்து கொல்கத்தா காந்தி மூர்த்தி பகுதியில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில் பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹாவுக்கு 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

கூச்பிஹார் மாவட்டத்தின் சிட்டால்குச்சியில் வாக்குச்சாவடி ஒன்றில் மத்தியப்படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினரை முற்றுகையிட்டு அவர்களது துப்பாக்கிகளை பறிக்க முயன்றதால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

சிட்டால்குச்சியில் குறைந்தது 8 பேரையாவது சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராகுல் சின்ஹா 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இன்று முதல் நாளை மறுநாள் 12 மணி வரை பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x