Published : 13 Apr 2021 10:15 AM
Last Updated : 13 Apr 2021 10:15 AM

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசு மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு அதிகாரி இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவேக்ஸின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா ஆகியவற்றின் கூட்டுடன் இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கோவாக்ஸின்’ தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், பின்னர் இரண்டாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் கொண்டவர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 1ம் தேதி முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் (இணைநோய் இல்லாதோருக்கும்) தடுப்பூசி வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமெடுத்துள்ளது. இந்தநிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு அதிகாரி இன்று அனுமதி வழங்கியுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் 3-வது கரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி பயன்பாட்டுக்கு வருகிறது.

ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் 10 கோடி எண்ணிக்கையில் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x