Last Updated : 13 Apr, 2021 08:38 AM

 

Published : 13 Apr 2021 08:38 AM
Last Updated : 13 Apr 2021 08:38 AM

உ.பி பஞ்சாயத்து தேர்தல் வேட்பாளரான உன்னாவ் பலாத்கார வழக்கு குற்றவாளியின் மனைவி: எதிர்ப்பிற்கு பின் வாபஸ் பெற்ற பாஜக

புதுடெல்லி

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் பாஜகவின் எம்எல்ஏவான குல்தீப்சிங் சென்கர். இவரது மனைவியான சங்கீதா சென்கரை பஞ்சாயத்து தேர்தலில் வேட்பாளராக்கிய பாஜக, அந்த அறிவிப்பை எதிர்ப்பின் காரணமாக வாபஸ் பெற்றது.

உத்தரப் பிரதேசத்தில் இன்று முதல் நான்கு கட்டங்களில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக, பாஜக சார்பில் இரண்டு வேட்பாளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டன.

இவற்றில் கான்பூர் அருகில் உள்ள மாவட்டமான உன்னாவின் பத்தேபூர் சவுரசி திர்தியாவின் ஜில்லா பஞ்சாயத்து தலைவருக்கான வேட்பாளர் பெயரும் இடம் பெற்றிருந்தது. இப்பதவியை தற்போது வகிக்கும் சங்கீதா சென்கரின் பெயரே மீண்டும் பாஜக அறிவித்திருந்தது.

பாஜகவின் இந்த அறிவிப்பினால், உ.பியில் பெரும் சர்ச்சை கிளம்பியது. ஏனெனில், உன்னாவில் கடந்த 2017 வருடம் நடைபெற்ற சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உன்னாவின் பாஜக எம்எல்ஏவான குல்தீப்சிங் சென்கர் இந்த வழக்கில் சிக்கியதே பிரச்சினை பூதாகரமானதற்குக் காரணம். பல்வேறு திருப்பங்கள் கொண்ட இந்த வழக்கில் கடந்த வருடம் குல்தீப்சிங்கிற்கு 10 வருடம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இதனால், உ.பி சட்டப்பேரவையில் குல்தீப்சிங் தனது எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவரது மனைவியான சங்கீதா தான் பத்தேபூர் சவுரசி திர்தியாவின் ஜில்லா பஞ்சாயத்தின் தற்போதயத் தலைவர்.

இதனால், அவர் வேட்பாளருக்கு பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தனது அறிவிப்பை பாஜக நேற்று வாபஸ் பெற்றது.

சங்கீதா சென்கருக்கு பதிலாக வேறு ஒருவர் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக நடைபெறும் உன்னாவ் தேர்தல் உள்ளிட்ட அனைத்தின் முடிவுகளும் மே 2 இல் வெளியாக உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x