Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM

தேவையானவர்களுக்கு தடுப்பூசி வழங்க பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகமாகி வருகிறது. எனவே கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகழ்ச்சிகள் நடத்துவதை விட்டுவிட்டு தேவையானவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முன்வர வேண்டும்.

கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போது 18 நாட்களில் இதை கட்டுப்படுத்தி விடுவோம் என்று பிரதமர் மோடி சூளுரைத்தார். கரோனா வைரஸை கட்டுப்படுத்த கைகளைத் தட்டுங்கள், செல்போனில் டார்ச் லைட்டை ஒளிரச் செய்யுங்கள் என்று என்னென்னவோ சொன்னார். ஆனாலும் கரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது 2-வது அலை ஏற்பட்டு லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தேவையான மக்களுக்கு தடுப்பூசியை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நிகழ்ச்சிகள் நடத்துவதை விட்டுவிட்டு பாதிப்பில் இருக்கும் மக்களுக்கு உதவுங்கள்.

வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்துங்கள். கஷ்டப்படும் ஏழை சகோதர, சகோதரிகளுக்கு வருமானம் கிடைக்க வழி செய்யுங்கள். நன்றி.

இவ்வாறு வீடியோவில் ராகுல் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x