Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM

என்ஆர்சி சட்டத்தால் கூர்க்கா மக்களுக்கு பாதிப்பில்லை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) சட்டம் கொண்டு வரப்பட்டால் கூர்க்கா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட பாதிக்கப்படமாட்டார் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார்.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே 4 கட்டதேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. எஞ்சிய 4 கட்டத் தேர்தல் முறையே ஏப்ரல் 17, 22, 26 மற்றும்29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் 44 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 5-ம் கட்டத் தேர்தலுக்காக அம்மாநிலத்தின் கலிம்போங் பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி.) கொண்டுவரப்பட்டால் கூர்க்கா சமூகம் வெளியேற்றப்படுவார்கள் என்று தவறான தகவல் மேற்கு வங்க மாநிலத்தில் பரப்பப்பட்டு வருகிறது. என்ஆர்சி இன்னும் இங்கு கொண்டு வரப்படவில்லை.

ஆனால். என்ஆர்சி கொண்டுவரப்பட்டாலும் கூர்க்கா சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட வெளியேற்றப் படமாட்டார்கள். திரிணமூல் காங்கிரஸ் பொய் சொல்கிறது. இந்தச் சட்டத்தால் ஒரு கூர்க்கா கூட பாதிக்கப்படமாட்டார் என நான் உறுதி அளிக்கிறேன்.

கலிம்போங்க் பகுதி பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது.1986-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உங்களை அடக்கியது.1200-க்கும் அதிகமான கூர்க்கா மக்கள் உயிரிழந்தனர். உங்களுக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை. மரியாதைக்குரிய தீதி (மம்தா பானர்ஜி) ஆட்சிக்கு வந்தபோதும் அவரும் சில கூர்க்கா மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தார். அதற்கும் நீதி கிடைக்கவில்லை.

மேற்கு வங்கத்தில் பாஜக அரசை நீங்கள் இப்போது தேர்ந்தெடுங்கள். நாங்கள் வந்த உடன் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து நீதி கிடைக்க செய்து தவறு செய்தவர்களை சிறைக்கு அனுப்புவோம்.

மம்தாவின் பேச்சை நீங்கள்கேட்கும்போது அவர் மேற்குவங்கத்தை விட என்னைப்பற்றிதான் அதிகம் பேசுகிறார். ‘மத்திய அமைச்சர் அமித்ஷா பதவியை ராஜினாமா வேண்டும்’ என்று சொல்லப்பட்டு வருகிறது. மேற்குவங்க மக்கள் என்னை எப்போது பதவியை ராஜினாமா செய்ய சொல்கிறார்களோ அப்போது எனது பதவியை நான் ராஜினாமா செய்வேன். ஆனால், மே 2-ம் தேதி மேற்குவங்க முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய நீங்கள் (மம்தா) தயாராக இருங்கள்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x