Last Updated : 12 Apr, 2021 09:25 PM

 

Published : 12 Apr 2021 09:25 PM
Last Updated : 12 Apr 2021 09:25 PM

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: 24 மணி நேரத்துக்கு பிரச்சாரம் செய்ய மம்தாவுக்கு தடை

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அடுத்த 24 மணி நேரத்துக்கு பிரச்சாரத்தில் ஈடுபட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

முஸ்லிம் வாக்குகளைப் பெற மத ரீதியாகப் பேசியதாகவும், மத்தியப் படைகளுக்கு எதிராக வெகுண்டெழுமாறு வாக்காளர்களை தூண்டியதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயக விரோதமானது, அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்டது என விமர்சித்து ட்வீட் செய்துள்ள மம்தா பானர்ஜி, நாளை 12 மணியளவில் காந்தி மூர்த்தி பகுதியில் தர்ணாவில் ஈடுபடப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இன்னமும் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மம்தா பானர்ஜிக்கு 24 மணி நேரம் பிரச்சாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 8 மணி வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.

மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 7ல் அவர் பேசியது தொடர்பாக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x