Published : 12 Apr 2021 06:01 PM
Last Updated : 12 Apr 2021 06:01 PM

மேலும் 5 கரோனா தடுப்பூசிகளுக்கு விரைவில் அனுமதி? 

புதுடெல்லி

ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பூசியை தொடர்ந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளிட்ட மேலும் 5 தடுப்பூசிகளுக்கு விரைவில் அனுமதி வழங்கக்கூடும் எனத் தெரிகிறது.

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் கொண்டவர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 1ம் தேதி முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் (இணைநோய் இல்லாதோருக்கும்) தடுப்பூசி வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமெடுத்துள்ளது. தற்போது இந்தியாவில் 10.45 கோடிக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.

உலகம் முழுவதும் ஓராண்டுக்கும் மேலாகப் பெரும் சவாலாக இருக்கும் கரோனா தொற்றைச் சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.

கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் இரண்டு தவணைகளாக வழங்கப்படக் கூடிய தடுப்பூசிகள். முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்.

உலக அளவில் பயன்பாட்டில் இருக்கும் ஃபைஸர், மாடர்னா, ஸ்புட்னிக்-5 போன்ற இன்னும் பல தடுப்பூசிகளும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளே. இதில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ளது மட்டும் ஒரு டோஸ் கரோனா தடுப்பூசி ஆகும். இந்தத் தடுப்பூசிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.

ஸ்புட்னிக் - வி, ஜான்சன் அண்ட் ஜான்சன், நோவாக்ஸ், சைடஸ் கடிலா, பாரத் பயோடெக்கின் இன்ட்ராநேசல் ஆகிய ஐந்து தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்க ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x