Published : 12 Apr 2021 05:05 PM
Last Updated : 12 Apr 2021 05:05 PM

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைப்பு:  மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

கரோனா பரவல் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக மகாராஷ்டிர பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

கரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், மால்கள், மதுபான விடுதிகள், மூடப்படுகின்றன. இதனைத் தவிர பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டு, இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மே மாதம் நடத்த மகாராஷ்டிர அரசு திட்டமிட்டு இருந்தது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மே 4-ல் தொடங்கி ஜூன் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுகளை சுமார் 30 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.

இதே சமயத்தையொட்டியே மகாராஷ்டிர அரசும் தங்கள் மாநில வழி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி முடிவு செய்து இருந்தது. ஆனால் கரோனா பரவல் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பள்ளி பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக மகாராஷ்டிர பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி 12-ம் வகுப்பு மே மாதம் நடைபெறும் எனவும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் மாதமும் நடைபெறும் எனவும் மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது இணையவழியில் நடத்த வேண்டும் என்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்டு மத்திய அரசுக்கு மனுக்கள் அனுப்பி வலியுறுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனாவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x