Last Updated : 12 Apr, 2021 10:13 AM

 

Published : 12 Apr 2021 10:13 AM
Last Updated : 12 Apr 2021 10:13 AM

உச்ச நீதிமன்ற ஊழியர்கள் 50% பேருக்கு கரோனா தொற்று: வழக்குகளை காணொளியில் விசாரிக்க நீதிபதிகள் முடிவு

உச்ச நீதிமன்ற ஊழியர்கள் பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் முன்புபோல் வீட்டிலிருந்தே காணொளி மூலம் வழக்கு விசாரணைகளைத் தொடர நீதிபதிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இன்றைய விசாரணை 1 மணி நேரம் தாமதமாகத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,68,912 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,774 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உலகளவில் கரோனா பரவலில் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது.

இவ்வாறாக அன்றாட கரோனா தொற்று பரவல் திகைக்கவைக்கும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற ஊழியர்கள் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், உச்ச நீதிமன்ற வளாகம், அறைகள் முழுவதுமே கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல நீதிபதிகளும் இனி முன்புபோல் காணொளியில் விசாரணையை வீட்டிலிருந்தே நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே வேளையில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவிருந்த விசாரணை 11.30 மணிக்கும், 11 மணிக்கு நடைபெறவிருந்த விசாரணை 12 மணிக்கும் மாற்றிவைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற கூடுதல் பதிவர் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகரிப்பதோடு தடுப்பூசி போடுவதையும் துரிதப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக நேற்று ஏப்ரல் 11 முதல் வரும் 14 ம் தேதிவரை நாடு முழுவதும் தடுப்பூசித் திருவிழா நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x