Published : 11 Dec 2015 10:13 AM
Last Updated : 11 Dec 2015 10:13 AM
“எனது பிறந்த நாளுக்கு பணம் செலவிட வேண்டாம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவுவதற்காக கோவா முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் கொடுங்கள் என்று கோவா மக்களிடம் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவா முன்னாள் முதல்வரான மனோகர் பாரிக்கர், இது தொடர்பாக பனாஜியில் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவா மக்கள் எனக்கு எப்போதும் ஆதரவும் ஆசியும் வழங்கி வருகின்றனர். எனது 60-வது பிறந்த நாள் வரும் 13-ம் தேதி வருகிறது. இத்தருணத்தில் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்யுமாறும் உதவி செய்யும்படியும் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
இக்கட்டான இத்தருணத்தில் சென்னை மக்களுக்கு நாம் துணை நிற்போம். எனது பிறந்த நாளில் விளம்பரங்கள், பரிசுப் பொருட்கள் அல்லது மலர் மாலைகளுக்கு செலவிட வேண்டாம் என்று எனது நலம் விரும்பிகளை கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு பதிலாக கோவா முதல்வரின் சென்னை நிவாரண நிதிக்கு பணம் கொடுங்கள். இது எனக்கு கோவாவில் இருந்து மிகுந்த மகிழ்ச்சி தரும் பிறந்த நாள் பரிசாக இருக்கும்.
இவ்வாறு மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT