

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 4-ம் கட்டமாக நேற்று நடந்த தேர்தலில் 76.14 சதவீத வாக்குகள் பதிவாகின.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் கடந்த மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் 4-ம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. ஹவுரா, ஹூக்ளி, கூச்பெஹார், தெற்கு 24 பர்கானாஸ் அலிப்பூர்துவார் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 44 தொகுதிகளில் வாக்குப் பதிவுநடைபெற்றது. மொத்தம் 373 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு கோடியே 15 லட்சத்து 81,022 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர். 15,940 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6.30 வரைநடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். இந்நிலையில் 4-ம் கட்ட தேர்தலில் 76.14 சதவீத வாக்குகள் பதிவாகின.
மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ, மேற்கு வங்க அமைச்சர்கள் பார்த்தா சாட்டர்ஜி, அரூப் விஸ்வாஸ், பாஜக எம்.பி.க்கள் லாக்கெட் சாட்டர்ஜி, நிசித் பிரமானிக் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் இதுவரை 135 தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்துள்ளது. ஐந்தாம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.