Last Updated : 10 Apr, 2021 07:37 PM

 

Published : 10 Apr 2021 07:37 PM
Last Updated : 10 Apr 2021 07:37 PM

ஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு அமித் ஷா பதில்

தேர்தல் பிரச்சாரம் வந்த பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு முஸ்லிம் இளைஞர் எடுத்த படம் எதிர்க்கட்சிகளால் விமர்சனத்திற்கு உள்ளானது. இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ஒரு இந்துவுடன் ஒவைஸியும் இதுபோல் படம் எடுக்கலாமே!" என பதில் அளித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தல் கடும் போட்டிக்கு உள்ளாகிவிட்டது. அங்கு அதிகமுள்ள முஸ்லிம் வாக்குகளை அள்ளுவதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு இடையே தீவிரப் போட்டி நிலவுகிறது.

நான்காம் கட்ட வாக்குப்பதிவின் பிரச்சாரத்திற்காக அதன் தென் 24 பர்கானா எனும் மாவட்டத்திற்கு சில தினங்களுக்கு முன் வந்தார் பிரதமர் மோடி. அப்போது தன்னைச் சந்தித்த ஒரு முஸ்லிம் இளைஞருடன் 40 வினாடிகள் அவர் சிரித்துப் பேசினார்.

அப்போது தலையில் முஸ்லிம்களின் தொப்பியும் அணிந்திருந்தவருடன் பிரதமர் மோடி உள்ள படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களுடன் தம் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.

இதில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா, முஸ்லிம்கள் வாக்குகளுக்காக இதுபோன்ற படங்களை எடுத்து வெளியிடுவதாகப் புகார் கூறினார். மற்ற எதிர்க்கட்சியினர், மேற்கு வங்கத் தேர்தலில் முஸ்லிம் வாக்குகளைப் பெறும் பாஜவின் முயற்சி எனவும், இதில் பிரதமர் மோடிக்குத் தோல்வியே கிடைக்கும் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

ஹைதராபாத் எம்.பியான ஏஐஎம் ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுத்தீன் ஒவைஸி, சிஏஏ சட்டத் திருத்தத்தை விமர்சிக்கும் வகையில், ’பிரதமர் மோடி நாங்கள் எங்களது குடியுரிமை ஆதாரங்களை காண்பிக்க மாட்டோம் எனக் கூறியிருப்பார்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

மற்றொரு பதிவில் ஒவைஸி, ”அந்த இளைஞரிடம் பிரதமர் மோடி என்ன கூறியிருப்பார் எனப் பத்திரிகையாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு நான் அந்த இளைஞர் தான் பங்களாதேஷ்வாசி இல்லை எனக் கூறியிருப்பார்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று பகுதியின் ஒரு பிரச்சார மேடையில் பேசிய பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷா, ”ஒரு இந்துவுடன் ஒவைஸி வேண்டுமானால் இதுபோல் ஒரு படம் எடுத்துக் கொள்ளலாமே” என விமர்சித்திருந்தார்.

படம் எடுத்த இளைஞர் யார்?

இதனிடையே, பிரதமர் மோடியுடன் படம் எடுத்த இளைஞர் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த இவரது பெயர் ஜுல்பிகார் அலி.

இவர், பாஜக சிறுபான்மைப் பிரிவில் கொல்கத்தாவின் தென்பகுதி தலைவராக உள்ளார். சில வருடங்களுக்கு முன் பாஜகவில் இணைந்த, ஜுல்பிகாருக்கு பிரதமர் மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு அன்று முதல் முறையாகக் கிடைத்துள்ளது.

இதற்காக அவருக்கு பிரதமர் பிரச்சார மேடை ஏறும் முன் வழியில் நின்று வணங்க அனுமதி கிடைத்திருந்தது. இதைப் பயன்படுத்திக் கொள்ள பிரதமர் மோடியுடன் ஜுல்பிகார் எடுத்த படம் அவரை பிரபலப்படுத்தி விட்டது.

இதுகுறித்து ஜுல்பிகார் அலி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''அவரைச் சந்தித்தபோது நான் சலாம் எனக் கூறினேன். பிரதமர் எனது பெயரைக் கேட்டார்.

நான் பெயரைக் கூறியபின் அவருடன் படம் எடுக்கும் விருப்பத்தைத் தெரிவித்தேன். இதற்கு அனுமதித்த பிரதமருடன் நான் எடுத்த படம் இவ்வளவு பிரபலமாகும் என சிறிதும் எண்ணவில்லை'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x