Published : 10 Apr 2021 02:26 PM
Last Updated : 10 Apr 2021 02:26 PM

திரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி; மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி பெறும்: பிரசாந்த் கிஷோர் ஆடியோ வெளியாகி சர்ச்சை

கொல்கத்தா

மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு உள்ளது என்றும் அக்கட்சியே வெற்றி பெறும் எனவும் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் பிரசாந்த் கிஷோர் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் வலுத்து வருகிறது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான நிறுவனம் வகுத்துக் கொடுத்து வருகிறது. இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் முன்பு ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டு இருந்தார். அதில் “குறிப்பிட்ட சில ஆதரவு ஊடகங்களின் அனைத்துவிதமான பிரச்சாரங்களால் பாஜக வலுவாகக் காண்பிக்கப்படுகிறது.

உண்மையில், மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வெல்லவே தடுமாறப் போகிறது. ஒருவேளை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றுவிட்டால், நான் ட்விட்டரிலிருந்து விலகிவிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் மேற்குவங்கத்தில் பாஜக தான் வெற்றி பெறும் என பேசியதாக மூத்த தலைவர் அமித் மால்வியா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கிளப்ஹவுஸ் உரையாடலில் பிரசாந்த் கிஷோர் பேசிய விவரம் வருமாறு:

மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மீது மக்களிடையே கடும் அதிருப்தி உள்ளது. ஆனால் பிரதமர் மோடி மீது அதிருப்தியில்லை. திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய சர்வேயில் கூட பாஜகவுக்கு ஆதரவு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த தேர்தலில் 3 விஷயங்கள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. நரேந்திர மோடிக்கு ஆதரவான அலை, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீதான 10 ஆண்டு அதிருப்தி, ஆளும் கட்சியின் சிறுபான்மை ஆதரவு போக்கு ஆகியவை முக்கியமானவை.

மேற்குவங்கத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை கவருவதே அரசியலாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பட்டியலின மக்கள் வாக்குகள் பாஜகவுக்கு செல்கிறது. மேற்குவங்கத்தில் இந்தி பேசுவோர் ஒரு கோடி எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர்.

மதுவாஸ் சிறுபான்மையினரில் 75% பேர் பாஜகவுக்கு வாக்களிக்கும் சூழல் உள்ளது. இடதுசாரி ஆதரவாளர்கள் கூட 10 - 15% பேர் பாஜக தான் ஆட்சி அமைக்ககும் என கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர். 50 - 55% இந்துக்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது. பெரும்பான்மையான கருத்து பாஜக தான் ஆட்சி அமைக்கும் என்பதாக உள்ளது.

இவ்வாறு பிரசாந்த் கிஷோர் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரசாத் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘இந்த ஆடியோவின் ஒரு பகுதியை மட்டும் பாஜக தவறாக பயன்படுத்தியிருக்கிறது. பாஜக எனது பேச்சை தங்கள் தலைவர்களின் வார்த்தைகளை விட தீவிரமாக எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அவர்கள் தைரியத்துடன் முழுவதையும் வெளியிட வேண்டும். நான் முன்பே கூறியதை இப்போதும் கூறுகிறேன். மேற்குவங்கத்தில் பாஜக இரட்டை இலங்கங்களுக்கு மேல் வெற்றி பெறாது’’ என அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x