Published : 22 Dec 2015 09:19 AM
Last Updated : 22 Dec 2015 09:19 AM

ரோஜா நீக்கத்தை ரத்து செய்ய முடியாது: ஆந்திர பேரவைத் தலைவர் அறிவிப்பு

ஆந்திர சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாக, எம்எல்ஏ ரோஜா ஓராண்டு இடைக்கால நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அனுமதியை மீறி சட்டப்பேரவையில் நுழைய முயன்ற ரோஜாவை, போலீஸார் கைது செய்தனர். அப்போது ரோஜா மயங்கி விழுந்ததால் அவர் ஹைதராபாத் நிஜாம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரோஜாவை ஓராண்டு காலம் வரை இடைக்கால நீக்கம் செய்தது செல்லாது எனவும், இதற்கு அவைக்கு அதிகாரம் இல்லை என்பதால், அவரை மீண்டும் அவையில் அனுமதிக்க வேண்டும் எனவும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உட்பட அக்கட்சியினர் பேரவைத் தலைவரிடம் நேற்று முறையிட்டனர்.

ஆனால் அதனை பேரவைத் தலைவர் கோடல சிவபிரசாத் ஏற்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து வரும் 23-ம் தேதி வரை நடைபெற உள்ள குளிர்கால கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக கூறி, ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது கட்சியினர் அவையை விட்டு வெளியேறினர். இதையடுத்து எதிர்க்கட்சியினர் இல்லாமலேயே 6 மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்த நாளையொட்டி, அவரது இருக்கைக்கு சென்று, சந்திரபாபு நாயுடு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். பேரவைத் தலைவர் கோடல சிவபிரசாத், அமைச்சர்கள், அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x