Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

குஜராத்தில் மீண்டும் பொது முடக்கம் வரும் என்ற அச்சத்தால் சொந்த ஊருக்கு புறப்பட்ட தொழிலாளர்கள்

கோப்புப் படம்

அகமதாபாத்

குஜராத்தில் கரோனா வேகமாக பரவுவதால் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்படலாம் என்ற அச்சத்தால் அங்கு பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், இந்த ஆண்டு தொடக்கத்தில் கணிசமாக குறைந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக, மகாராஷ்டிராவில் திங்கள் முதல்வெள்ளி வரையில் இரவு நேரத்திலும் (8 மணி முதல் காலை 7 மணிவரை) சனி, ஞாயிற்றுக்கிழமை களில் பகல், இரவு என முழு நேரமும்பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட் டுள்ளது.

இதுபோல டெல்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் இரவு நேர பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்திலும் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தால், சூரத், அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

இதுகுறித்து மண்டல ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் யோகேஷ் மிஷ்ரா கூறும்போது, “குஜராத்தில் கரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தலாம் என உயர் நீதிமன்றம் சமீபத்தில்கூறியிருந்தது. அப்படி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டால் கடந்த ஆண்டைப் போலவே சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கிக் கொள்வோமோ என்ற அச்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதனால் அகமதாபாத்தில் பணிபுரிந்த உத்தரபிரதேசம், பிஹார் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். இதுபோல ரயிலுக்காக முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்றார்.

சூரத் சொகுசுப் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் தினேஷ் அந்தன் கூறும்போது, “உ.பி., ம.பி., பிஹார், ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் சொகுசு பேருந்துகளில் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்” என்றார்.

இதுகுறித்து குஜராத் கூடுதல்தலைமைச் செயலாளர் (தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு) விபுல் மித்ரா கூறும்போது, “பொதுமுடக்கம் அமலில் இல்லாத நிலையில், ரயில்கள் இயக்கப்படுவதால் மக்கள் எந்த ஊருக்கும் சுதந்திரமாக செல்லலாம். அவர்களை தடுக்க முடியாது. அந்தவகையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே சொந்த ஊர் திரும்புகின்றனர். அதேநேரம் தொழிலாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x