Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்களை சட்ட விதிகளை பின்பற்றி மியான்மருக்கு திருப்பி அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி

சட்ட விதிகளை பின்பற்றி ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மருக்கு திருப்பி அனுப்பலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடானமியான்மரில் கடந்த 2015-ல் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதன்காரணமாக சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள் வங்கதேசம், மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

வங்கதேசம் வழியாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள் நுழைந்தனர். அவர்கள் அசாம், மேற்குவங்கம், உத்தர பிரதேசம், டெல்லி,காஷ்மீர், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ளமுகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளனர்.

ஜம்முவில் சுமார் 11,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் வசிப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள்தெரிவித்துள்ளன. அவர்களில் 155 பேர் ஜம்முவின் மவுலானா ஆசாத் மைதானத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதை எதிர்த்து முகமது என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, சுப்பிரமணியன் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார். "மியான்மரில் ராணுவ கொடுங்கோல் ஆட்சி நடைபெறுகிறது. இந்த நேரத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மருக்கு அனுப்பினால் அவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள்" என்று வாதிட்டார்.

மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, "ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் கிடையாது. அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி உள்ளனர். அவர்களை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப வேண்டும்" என்று தெரிவித்தார். இந்த வழக்கில் ஐ.நா. சபை சார்பில் விளக்கம் அளிக்க அனுமதிகோரப்பட்டது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதை ஏற்று ஐ.நா. சபையை வழக்கில் சேர்க்க தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அனுமதி அளிக்க வில்லை.

இறுதியில் தலைமை நீதிபதி பாப்டே கூறும்போது, ‘‘சட்ட விதி களை பின்பற்றி ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மருக்கு திருப்பி அனுப்பலாம். எனினும்சட்டவிதிகளை மீறி யாரையும்மியான்மருக்கு நாடு கடத்தக்கூடாது’’ என்று உத்தரவிட்டார். அதோடு பொதுநல மனுவையும் தலைமை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x