Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வரும் 29-ம் தேதி வெளியீடு

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்பு முடிவுகள் வரும் 29-ம் தேதி வெளியாகின்றன.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் நேற்று முன்தினம் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நிறைவடைந்தன. இவற்றில் அசாமில் மட்டும் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. எனினும், மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அங்கு கடைசிகட்ட வாக்குப்பதிவு ஏப்ரல்29-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.

இதனிடையே, மேற்குறிப்பிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியாகவுள்ளன.

இந்நிலையில், தேர்தலுக்குபிந்தைய கருத்துக்கணிப்புகள் வரும் 29-ம் தேதி இரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளை, அன்றைய தினம் இரவு 7.30 மணி வரை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. எனவே, குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளைக் காட்டிலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளே அதிக நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என மக்கள் மத்தியில் பரவலாக கருத்து உள்ளது.

ஏனெனில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள், வாக்காளர்களின் மனநிலையை ஓரளவுக்கு மட்டுமே வெளிப்படுத்துவதாக அமையும். ஆனால்,தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளானது, வாக்குச்சாவடிகளில் வாக்களித்துவிட்டு திரும்பும் மக்களிடம் நேரடியாக எடுக்கப்படுவது ஆகும்.

எனவே, இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளை வைத்து ஏறக்குறைய தேர்தல் முடிவுகளை கணித்துவிடலாம் என மக்கள் கருதுகின்றனர். ஆதலால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகும் தினத்தை அரசியல் கட்சிகளும், மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x