Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

கலப்பட குடிநீர் குடித்ததால் ஆந்திராவில் 4 பேர் உயிரிழப்பு

கர்னூல்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கோருகல்லா கிராமத்தில் கடந்த 3 நாட்களாக குடிநீரில் கால்வாய் நீர் கலந்து வருவதாக தெரிகிறது. இது தெரியாமல், அந்த நீரை குடித்த 30-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் நந்தியாலா அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்றைய தினம் 3 பேர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து, கிராமத்தில் உள்ள பலருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சுமார் 150 பேர் நந்தியாலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், உதவி ஆட்சியர் கல்பனா குமாரி மற்றும் மருத்துவ அதிகாரிகள் நந்தியாலா மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சம்பந்தப்பட்ட கிராமத்தில் மேல் நிலை குடிநீர் தொட்டி மற்றும் கிராமம் முழுவதும் உள்ள கால்வாய்களை சுத்தம் செய்ய அவர்கள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், நாளுக்கு நாள் நிலைமை மோசமடைவதை உணர்ந்த கிராம மக்கள், குடும்பம், குடும்பமாக வீடுகளை காலி செய்து விட்டு, வேறு கிராமங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x