Published : 07 Apr 2021 04:43 PM
Last Updated : 07 Apr 2021 04:43 PM

மொத்தம் 8.7 கோடி பேருக்கு கரோனா  தடுப்பூசி; ஒருநாள் சாதனை: அமெரிக்காவை மிஞ்சியது இந்தியா

புதுடெல்லி

நாடுமுழுவதும் போடப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று 8.70 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணி வரை 8,70,77,474 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 33 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன. 81-வது நாளான நேற்று 33,37,601 தடுப்பூசிகள் போடப்பட்டன.குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, உலகில் வேகமாக தடுப்பூசிகள் போடும் நாடுகளில், நாளொன்றுக்கு சராசரியாக 30,93,861 தடுப்பூசிகள் என்ற அளவுடன் இந்தியா அமெரிக்காவை மிஞ்சியுள்ளது.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 29,98,533 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இந்த எண்ணிக்கை 30,93,861 ஆக உள்ளது. 3-வது இடத்தில் பிரேசிலில் 3,71,446 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாட்டில் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,15,736 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 80.70 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், டெல்லி, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்ச அளவாக 55,469 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,17,92,135-ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 59,856 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர் பலியாகியுள்ளனர்.

நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 8,43,473. தினசரி கோவிட் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

கோவிட்-19 நிலவரம், தடுப்பூசி நிலவரம் குறித்து பிரதமர் கடந்த 4ம் தேதி உயர்நிலைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச செயலாளர்களுடன், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

கோவிட் பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் காணொலி காட்சி மூலம் நடந்த உயர்நிலை ஆய்வு கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று தலைமை தாங்கினார். மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவ 50 உயர் நிலைக் குழுக்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த குழுக்கள் 3 முதல் 5 நாட்களுக்கு இந்த மாநிலங்களில் இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x