Published : 07 Apr 2021 01:02 PM
Last Updated : 07 Apr 2021 01:02 PM

‘‘முகக்கவசம் அணியுங்கள்; அடிக்கடி கைகளைக் கழுவுங்கள்:  கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முழு கவனம் செலுத்துவோம்’’ - பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி

உலக சுகாதார தினமான இன்று, முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளைக் கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் முழு கவனம் செலுத்துவோம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

உலக சுகாதார தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தி:

“மிகத் தரமான, குறைந்த செலவிலான மருத்துவ வசதி மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் மக்கள் மருத்துவத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக உலகிலேயே மிகப் பெரிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது.

உலக சுகாதார தினமான இன்று, முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளைக் கழுவுவது, பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது போன்ற, நம்மாலான அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொண்டு கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் முழு கவனம் செலுத்துவோம்.

அதே நேரத்தில் நமது நோய் தடுப்பாற்றலை அதிகரிப்பதற்கான அனைத்து செயல்களையும் மேற்கொண்டு நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.

நமது புவிப் பந்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக இரவும், பகலும் அயராது பாடுபடும் அனைவருக்கும் நமது நன்றிகளையும், பாராட்டுகளையும் மீண்டும் தெரிவிப்பதற்கான ஒருநாள் தான் உலக சுகாதார தினம். மருத்துவத் துறையில் ஆராய்ச்சிக்கும், புத்தாக்கத்திற்குமான நமது ஆதரவை உறுதி செய்வதற்கான நாளும் கூட” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x